தவான் சதம்
முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை சந்தித்தது இந்தியா, அந்தப் போட்டியில் ரோஹித் சதம் அடிக்க, இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டியில் மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்தார். இந்தியா பெரிய இலக்கை நிர்ணயித்து வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
தவான் விரலில் காயம்
அந்தப் போட்டியில் ஷிகர் தவான் பேட்டிங் செய்து வந்த போது அவரது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் குறைந்தபட்சம் அடுத்த 3 வாரங்களுக்கு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது என்ற செய்திகள் வந்துள்ளன.
மாற்று வீரர்
மூன்று வார காலத்தில் இந்தியா ஐந்து அல்லது ஆறு லீக் போட்டிகளில் விளையாடும். அத்தனை போட்டிகள் வரை தவான் இந்திய அணியுடனேயே பயணம் செய்ய மாட்டார். அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வார்கள் என சில செய்திகள் கசிந்துள்ளன.
ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் ஐயர்
அப்படி மாற்று வீரராக யாரை தேர்வு செய்வார்கள் என்பதே பலரின் கேள்வி. ரசிகர்கள் பலரும் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என இணையத்தில் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், உலகக்கோப்பை போன்ற தொடர்களில் பொறுப்பாகவும் விளையாட வேண்டும் என்பதால் முதிர்ச்சியாக, சூழ்நிலை உணர்ந்து ஆடக் கூடிய வீரரான ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மிடில் ஆர்டர்
ஷிகர் தவானுக்கு மாற்று வீரராக இவர்களில் ஒருவர் அணியில் இடம் பெற்றாலும், துவக்க வீரராக தற்போது மிடில் ஆர்டரில் ஆடி வரும் ராகுல் தான் இடம் பெறுவார் என திட்டவட்டமாக கூறப்படுகிறது. அதன்படி, மிடில் ஆர்டரில் கூடுதல் வீரர் என்ற இடத்திற்கே ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷப் பண்ட், இருவரில் ஒருவர் இடம் பெறுவார்.
டெல்லி அணியில் கலக்கல்
ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடினர். டெல்லி அணியில் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பாக ரன் சேர்ப்பதில் தான் கெட்டி என போட்டிக்கு போட்டி நிரூபித்தார்.
அதிரடி
சின்னத் தம்பி ரிஷப் பண்ட், இளம் வீரர் என்பதால் எப்போதும் அதிரடியாவே ஆடினார். சில போட்டிகளில் அவரது அதிரடி அணிக்கு வெற்றி தேடித் தந்தது. சில சமயம் அவர் பெரிய பங்களிப்பு செய்யவில்லை. எனினும், தொடர் முடிவில் அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையிலேயே இருந்தது.
அம்பதி ராயுடு சந்தேகம்
இதில் ரிஷப் பண்ட் ஏற்கனவே உலகக்கோப்பை மாற்று வீரர்கள் என அறிவிக்கப்பட்ட ஐந்து வீரர்களில் ஒருவர். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இவர்கள் தவிர்த்து அம்பதி ராயுடு மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றாலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.