தவான் காயம்
ஷிகர் தவான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்தார். அவருக்கு இடது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முக்கிய வீரரான அவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டது.
ரிஷப் பண்ட் குழப்பம்
உடனடியாக ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார். ஆனால், அவர் உடனடியாக அணியில் சேர்க்கப்படவில்லை. ஐசிசி விதிப்படி காயமடைந்த தவானை அணியில் இருந்து நீக்கிவிட்டால் அவரை மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ள முடியாது. அதனால், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் தவான் காயம் குறித்து ஒரீரு நாட்கள் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
தேர்வுக் குழு கருத்து வேறுபாடு
தேர்வுக் குழுவினர் தவான் வரும் வரை எல்லாம் காத்துக் கொண்டு இருக்க முடியாது. உடனடியாக ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளனர். எனினும், கோலி பிடிவாதமாக தவான் அரையிறுதி சுற்றுக்குள் தயாரானால் போதும் எனக் கூறி தடுத்துள்ளார்.
|
தவான் நீக்கம்
இந்த நிலையில், பாகிஸ்தான் போட்டிக்கு பின் பிசிசிஐ, தவானை நீக்கி விட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர் காயம் குணமாகி, அவர் விளையாட தயாராக ஜூலை இரண்டாம் வாரம் (உலகக்கோப்பை முடிந்து விடும்) வரை ஆகலாம் என மருத்துவர்கள் கருத்து கூறியதாக பிசிசிஐ காரணம் கூறி உள்ளது.
ரிஷப் பண்ட் வாய்ப்பு
தவான் இடத்திற்கு ரிஷப் பண்ட் நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். மற்ற வீரர்கள் யாரை குறித்தும் தேர்வுக் குழு அல்லது கேப்டன் கோலி யோசிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், ரிஷப் பண்ட் இடது கை ஆட்டக்காரர் என்பது தான்.
சரியான மாற்று வீரர்
இந்திய அணியில் இருக்கும் ஒரே இடது கை பேட்ஸ்மேன் தவான் மட்டுமே. அவரை நீக்கும் பட்சத்தில் அவருக்கு மாற்றாக இடது கை ஆட்டக்காரர் ஒருவரை தான் அணியில் சேர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேர்வுக் குழு பண்ட்டை அணியில் சேர்த்துள்ளனர்.
வாய்ப்பு கிடைக்குமா?
ரிஷப் பண்ட் 15 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் போட்டிகளில் களமிறங்குவாரா? என்பது விடை தெரியாத கேள்வி தான். விஜய் ஷங்கர் ஆடாத பட்சத்தில் ரிஷப் பண்ட்டுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பண்ட் வாய்ப்பு பெறலாம்.