நாட்டிங்ஹாம் : ரிஷப் பண்ட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஆடப் போகிறார் என கடந்த இரண்டு நாட்களாக இந்திய ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவி வந்தது. அவரும் இங்கிலாந்து கிளம்பிச் சென்றார்.
ஆனால், அவர் இந்திய அணிக்காக விளையாட முடியாது என தற்போது உறுதியாக தெரிய வந்துள்ளது.
ரிஷப் பண்ட், இந்திய அணியில் காயமடைந்த ஷிகர் தவானுக்கு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார் என கூறப்பட்டது.
ஆனால், தவான் இப்போதும் இந்திய அணியில் நீடிக்கிறார். பின், ரிஷப் பண்ட்டை எதற்கு இங்கிலாந்து அனுப்பி வைத்தார்கள்? இதன் பின் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஷிகர் தவான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்தார். அவரது இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது, அவரை நீக்கி விட்டு, ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்பட்டது. அதே போல, ரிஷப் பண்ட் அடுத்த 48 மணி நேரத்தில் இங்கிலாந்துக்கு சென்றதாக செய்திகள் வெளியானது. ஆனால், ரிஷப் பண்ட் இந்திய அணியில் இணையவில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் சொல்லப்படுகிறது.
ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும். அந்த 15 வீரர்கள் தவிர்த்து வேறு வீரர்கள் உடை மாற்றும் அறையிலோ, அணியிலோ இடம் பெறக் கூடாது.
அந்த 15 வீரர்களில் யாரேனும் காயமடைந்தால், அது குறித்த மருத்துவ அறிக்கை சமர்ப்பித்து, ஐசிசியின் ஒப்புதல் பெற்று காயமடைந்த வீரரை நீக்கி விட்டு, மாற்று வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இதன் பின் காயமடைந்த வீரர் குணமாகி விட்டால் அவரை மீண்டும் அணியில் நேரடியாக சேர்த்துக் கொள்ள முடியாது.
தற்போது தவான், இன்னும் இரு வாரங்களில் குணமடைவார் என கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், தேர்வுக் குழுவினர் தவான் குணமாவதற்குள் லீக் போட்டிகளே முடிந்து விடும். எனவே, அவர் காயத்தை காட்டி ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என கூறி அழுத்தம் கொடுத்தனர்.
ஆனால், கோலி பிடிவாதமாக, தவான் காயம் குணமான பின் நிச்சயம் தேவை. இப்போது அவரை நீக்கி விட்டால், முக்கியமான அரையிறுதி, இறுதிப் போட்டிகளின் போது அவரை அணியில் சேர்க்க முடியாது என கூறி உள்ளார்.
இதற்கிடையே இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்ட ரிஷப் பண்ட், இந்திய அணியில் சேர்க்கப்படாமல் தனியே இருக்கிறார். ஏற்கனவே, இந்திய அணியின் பயிற்சிக்கு உதவ சில வீரர்கள் இங்கிலாந்தில் தங்கி உள்ளனர். அவர்களைப் போலவே ரிஷப் பண்ட்டும் இங்கிலாந்தில் இருக்கிறார். அவரால் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட முடியாது என்பதே உண்மை.
ஒருவேளை தவான் காயம் பெரிதானால், அவரை நீக்கலாம் என அணி நிர்வாகம் முடிவு எடுத்தால், ரிஷப் பண்ட் உலகக்கோப்பை போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறுவார். அது வரை உலகக்கோப்பை போட்டிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்.