ஸ்விங் பந்துவீச்சு
இந்திய அணியின் சிறந்த துவக்க ஜோடிகளில் ரோஹித் சர்மா, ஷிகர் தவானுக்கு நிச்சயம் இடம் உண்டு. ஆனால், இவர்கள் இருவரும் பவர்பிளே ஓவர்களில், ஸ்விங் பந்துகளை தாக்குப் பிடிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பயிற்சிப் போட்டிகளில்..
உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இங்கிலாந்து ஆடுகளங்களில் துவக்க ஓவர்களில் பந்து அதிகம் ஸ்விங் ஆகும். இந்தியா ஆடிய இரண்டு உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகளில் ரோஹித் - தவான் ஜோடி ஸ்விங் பந்துகளில் எளிதாக தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஆசிய அணிகள் தடுமாற்றம்
இதுவரை நடந்த லீக் தொடர்களில் ஆசிய அணிகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளின் டாப் ஆர்டர் வீரர்களும் ஸ்விங் பந்துவீச்சில் சிக்கி தங்கள் விக்கெட்டை இழந்தனர்.
பதற்றம்
இந்திய வீரர்கள் ரோஹித் - தவானும் பயிற்சிப் போட்டிகளில் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள திணறியுள்ளனர். இதனால், உலகக்கோப்பை லீக் போட்டிகளில் இவர்கள் இருவரும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற பதற்றம் இயல்பாகவே ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தொடர்
ரோஹித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி, உலகக்கோப்பை தொடருக்கு முன் கடைசியாக இந்தியா ஆடிய ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஒரு போட்டி தவிர மற்ற போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை. ஆனால், அப்போது அது பெரிதாக தெரியவில்லை.
கவலை
தற்போது பயிற்சிப் போட்டியிலும் அவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருப்பது இந்திய ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது. ஒருவேளை லீக் போட்டிகளில் இவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் அதை சமாளிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
வலுவான டாப் ஆர்டர்
இந்திய அணியை பொறுத்தவரை, மிகவும் வலுவான, அனுபவ வீரர்கள் நிறைந்த டாப் ஆர்டர் கொண்ட அணி. ரோஹித், தவான், கோலி ஆகிய மூவர் கூட்டனிக்கு இணையாக உலகில் வேறு எந்த அணியும் டாப் ஆர்டரும் இல்லை என கூறலாம்.
சிறப்பாக ஆடுவார்கள்
ஆனால், உலகக்கோப்பை தொடரில் இந்த வெற்றுப் பேச்சுக்கள் பலனளிக்காது. ரோஹித் சர்மா - தவான் கூட்டணி தங்கள் தவறுகளை சரி செய்து கொண்டு லீக் போட்டிகளில் பட்டையைக் கிளப்புவார்கள் என இந்திய ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.