பாகிஸ்தான் போட்டி
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான லீக் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியை டிஎல்எஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரோஹித் சர்மா 140, கோலி 77, ராகுல் 57 ரன்கள் குவித்தனர். புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் விஜய் ஷங்கர், பண்டியா கட்டுக்கோப்பாக பந்து வீசி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
முந்தைய வெற்றிகள்
பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியையும், வலுவான ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி இருந்தது. மழையால் கைவிடப்பட்ட நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி தவிர, இந்தியா வெற்றிகளை மட்டுமே சந்தித்து வந்துள்ளது. இந்த வெற்றிப் பாதைக்கு காரணமான அந்த கட்டுப்பாடு என்ன?
கட்டுப்பாடு என்ன?
இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் போட்டிக்கு பின்னரே தங்கள் குடும்பத்தினரை, தங்களுடன் தங்க வைத்துக் கொள்ளலாம். அவர்களுடன் நேரம் செலவிடலாம். அதுவரை பயிற்சி மற்றும் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதே அந்த கட்டுப்பாடு.
20 நாள் கட்டுப்பாடு
இந்திய அணியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில், முதல் 15 நாட்களுக்கு வீரர்கள், தங்கள் குடும்பத்தினரை விட்டு விலகியே இருக்க வேண்டும் என்பதே பிசிசிஐ வகுத்துள்ள விதி. ஆனால், உலகக்கோப்பை தொடரில் அந்த 15 நாட்கள் இடைவெளியை, பாகிஸ்தான் போட்டியை ஒட்டி 20 நாட்களாக அதிகரித்துள்ளனர். இதுதான் இந்திய அணியின் வெற்றிப் பயணத்துக்கு காரணம் என்றே பலரும் கூறுகின்றனர்.
எதிர்ப்பு
இதே விஷயத்தில் தான் பாகிஸ்தான் அணி சறுக்கி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வந்தனர். முன்னாள் வீரர்கள் சிலர் இந்திய போட்டிக்கு முன் எப்போதும் இப்படி நடந்ததில்லை எனக் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாகிஸ்தான் சறுக்கியது
இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பாகிஸ்தான் வீரர்கள் குடும்பத்தினருடன் உணவகத்துக்கு சென்றதும், பாகிஸ்தான் கேப்டன் பர்கர் சாப்பிட்டதும் பெரும் சர்ச்சை ஆனது. இந்த கட்டுப்பாட்டில் தான் பாகிஸ்தான் அணி சறுக்கியது. இந்திய அணி வெற்றி பெற்றது.
இனிமேல்..
இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பதினரை தற்போது இங்கிலாந்துக்கு அழைத்துள்ளனர். இந்திய அணி இனிமேல் ஆடும் போட்டிகளில் வெற்றி பெறுமா? அல்லது கட்டுப்பாடு இருந்தால் மட்டும் தான் சிறப்பாக ஆடுவார்களா? பார்க்கலாம்.