விராட் கோலி - ரவி சாஸ்திரி
இந்திய அணியில் கோஷ்டி என்று ஒன்று துவங்க முதல் காரணம் கேப்டன் விராட் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் என கூறுகிறார்கள். அனில் கும்ப்ளேவை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வைத்த கேப்டன் கோலி, தனக்கு சாதகமாக இருக்கும் ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியில் நியமிக்க வைத்தார். அப்போது முதல் இந்திய அணியில் சில வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலை உருவானது.
வீரர்கள் யார்?
அதே போல சில வீரர்கள் தொடர்ந்து அணியில் இடம் பெறும் சூழலும் உருவானது. குறிப்பாக, உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற மூன்று வீரர்களை சொல்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் கே எல் ராகுல். ராகுல் 2017-2018ஆம் ஆண்டுகளில் மிக மோசமாக கிரிக்கெட் ஆடியும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெற்று வந்தார். அவர் விராட் கோலிக்கு வேண்டப்பட்டவர் என அப்போதே கூறப்பட்டு வந்தது.
ஐபிஎல் சாஹல்
ஐபிஎல் தொடரில் கோலி கேப்டனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்று இருந்ததால் சாஹல் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்ததாக ஒரு தகவல் கூறப்படுகிறது. சாஹல் கோலிக்கு பிடித்தவர் என்பதால் தான் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் என பல வீரர்களை தாண்டி அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார் என்கிறார்கள்.
விஜய் ஷங்கர் - ராயுடு
அதே போல விஜய் ஷங்கரை கோலிக்கு மிகவும் பிடித்துப் போனதால், அம்பதி ராயுடுவை நீக்கி விட்டு, அவரை அணியில் சேர்க்கச் செய்துள்ளார் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் தான் விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மையமான வீரர்கள்
இவர்கள் தவிர ஹர்திக் பண்டியா, பும்ரா உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடினாலும், ரோஹித் சர்மா கோஷ்டியில் இடம் பெறவில்லை. அவர்கள் கோலி - ரோஹித் இருவருடனும் சுமூகமாக இருந்து வருகிறார்கள் என கூறப்படுகிறது. ஜடேஜா, கேதார் ஜாதவ் ஆகியோர் அணியில் புறக்கணிக்கப்பட்டதில் இருந்தே அவர்கள் கோலிக்கு வேண்டிய வீரர்கள் இல்லை என்பது புரியும்.
ரோஹித் சர்மா எதிர்ப்பாரா?
பிசிசிஐ கூட்டத்தில் ரோஹித் சர்மா அணிக்குள் இருக்கும் பிளவை வெட்ட வெளிச்சமாக்குவார் என்கிறார்கள். அப்படி நடந்தால் மட்டுமே இந்த விவகாரம் முடிவுக்கு வந்து, இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும்.