குழப்பங்கள்
உலகக்கோப்பை தொடருக்கு கிளம்பும் முன் இந்திய அணிக்கு இருந்த முக்கிய குழப்பம், பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் எந்த வீரரை ஆட வைப்பது என்பது. ராகுல், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் என பல பெயர்கள் கூறப்பட்டு வந்தாலும், யாரை ஆட வைக்கலாம் என்பது முடிவாகாமல் இருந்தது.
கேள்விகள்
ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்ட குல்தீப் யாதவ், பார்ம் அவுட்டில் இருந்தார். கேதார் ஜாதவ் காயத்தில் இருந்தார். வேகப் பந்துவீச்சாளர்களாக எந்த இருவரை ஆட வைக்கலாம் என்ற கேள்வியும் இருந்தது.
சரியான நபர்
இந்த நிலையில், பயிற்சிப் போட்டிகளில் இந்திய அணி சில தெளிவான முடிவுகளைப் பெற்றுள்ளது. முக்கியமாக, நான்காம் வரிசை பேட்டிங்கிற்கு ராகுல் தான் சரியான நபர் என்ற முடிவுக்கு வந்துள்ளது இந்திய அணி.
சதம் அடித்தார்
இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஒரு முறை ரன் அடிக்காவிட்டாலும், இரண்டாம் முறை சதம் அடித்து அசத்தினார் ராகுல். ஏற்கனவே ஐபிஎல் தொடரிலும் ராகுல் கலக்கி இருந்தார். அதனால், அவரை நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக ஆட வைப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளது இந்திய அணி.
விஜய் ஷங்கர் வாய்ப்பு
அதே சமயம், விஜய் ஷங்கர் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம், ராகுல் சிறப்பாக ஆடி அணியில் தன் இடத்தை உறுதி செய்ததும், தனக்கு கிடைத்த ஒரே ஒரு பயிற்சிப் போட்டி வாய்ப்பில் 2 ரன்களில் ஆட்டமிழந்ததும் தான்.
புவி, ஷமி - யார்?
வேகப் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை பும்ரா செம பார்மில் இருக்கிறார். எதிரணி வீரர்கள் அவரைக் கண்டாலே நடுங்குகிறார்கள். பயிற்சிப் போட்டிகளில் புவனேஸ்வர் குமார், ஷமி இருவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே கைவசம் சில வித்தைகள் வைத்துள்ளார்கள். எனவே, இவர்கள் இருவரில் ஒருவர் மாற்றி, மாற்றி அணியில் இடம் பெறுவார்கள்.
தோனி நம்பிக்கை
பயிற்சிப் போட்டியில் கோலி, தோனி ஒரு போட்டியில் சிறப்பாக ஆடினார்கள். தோனி அதிரடியாக சிக்ஸர் மழை பொழிந்து சதம் அடித்தது இந்திய அணிக்கு பத்து மடங்கு தெம்பாக இருக்கிறது.
ரோஹித் - தவான் திணறல்
மேலே கூறியது எல்லாம், இந்திய அணிக்கு சாதகமான விஷயங்கள். ஆனால், பயிற்சிப் போட்டியில் ஒரு முக்கிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா - ஷிகர் தவான், இருவரும் துவக்க ஓவர்களில் வேகப் பந்துவீச்சில் திணறி வருகிறார்கள். வேகப் பந்துவீச்சுக்கு ஏற்ற இங்கிலாந்து ஆடுகளங்களில் துவக்க ஓவர்களில் ஸ்விங் ஆகும் பந்துகளை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
இந்தியா ஜெயிக்குமா?
ஆக, இந்தியா ஜெயிக்குமா என்று கேட்டால், தற்போது பலம் குறைந்த அணிகளாக இருக்கும் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக இந்தியா எளிதாக வெற்றி பெறும் என கூறலாம்.
தடுமாறும்
ஆனால், வலுவான அணிகளாகவும், வேகப்பந்துவீச்சில் வலுவாக இருக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக இந்தியா தடுமாறும். பயிற்சிப் போட்டிகளில் தெரிவதும் இதுதான்.