தவான் நீக்கம்
தவான் அரையிறுதிப் போட்டிக்குள் தயாரானால் கூட போதும் என காத்திருந்தது இந்திய அணி. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என தெரிய வந்தது. எனவே, தவானை அணியில் இருந்து நீக்கியது பிசிசிஐ.
அணிக்கு பாதிப்பா?
தவானுக்கு மாற்றாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும்,தவான் இல்லாத இந்திய அணி பலமாக இருக்குமா? எதிரணிகளை சமாளித்து வெற்றிகள் குவிக்குமா? என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
ராகுல் எப்படி?
தவானுக்கு பதில் துவக்க வீரராக ராகுல் களமிறங்கி வருகிறார். அவர் துவக்கத்தில் நிதானமாக ரன் சேர்ப்பதை வழக்கமாக கொண்டு ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரிலும் அதே போலவே ஆடினார். எனினும், அதிக ரன் குவிக்க அவர் தவறுவதில்லை என்பதால், இந்திய அணிக்கு துவக்க வீரர் என்ற வகையில் தவானால் இழப்பு இல்லை.
ஏழு பேட்ஸ்மேன்கள்
மேலும், இந்திய அணியின் பலம் நீண்ட பேட்டிங் வரிசை தான். ராகுல், ரோஹித் சர்மா, கோலி என முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அடுத்து தோனி, விஜய் ஷங்கர் (அல்லது ரிஷப் பண்ட்), கேதார் ஜாதவ், ஹர்திக் பண்டியா நான்கு பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஏழு பேட்ஸ்மேன்கள் கொண்ட இந்திய அணிக்கு தவான் இல்லாதது பெரிய இழப்பாக இருக்காது.
இதில் மாற்று இல்லை
தவான் ஐசிசி தொடர்கள் என்றால் அடித்து நொறுக்கி விடுவார் என்ற பெயர் உள்ளது. 2015 உலகக்கோப்பை தொடரில் இருந்து, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வரை ஐசிசி தொடர்களில் சிறப்பாக ரன் குவித்துள்ளார் தவான். இந்த விஷயத்தில் தவானுக்கு மாற்று வீரரே கிடையாது என்பதே உண்மை.
முக்கிய பாதிப்பு இது தான்
தவான் நீக்கத்தால் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள முக்கிய பாதிப்பு டாப் ஆர்டரில் இடது கை ஆட்டக்காரர் இல்லாதது தான். தவானுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் இடது கை ஆட்டக்காரர் என்றாலும், அவருக்கு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் டாப் ஆர்டரில் களமிறங்குவாரா? என்பது கேள்விக் குறியே! இந்த ஒரு பிரச்சனைக்கு மட்டும் தான் தீர்வு இல்லை.