டாக்கா: வங்காளதேசத்தில் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் ஏற்பட்ட சண்டையில் சக வீரர் ஸ்டெம்பால் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் உள்ளூர் இளைஞர்கள் பங்குபெறும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷிக்தார் என்ற 16 வயது சிறுவன் விக்கெட் கீப்பராக இருந்தார். அப்போது அவரது அணியைச் சேர்ந்த வீரர் பவுலிங் செய்தார். இதில் பேட்ஸ்மேன் அவுட்டானார்.
ஆனால், அது நோபால் என அம்பயர் கூறியதால் பேட்ஸ்மேன் தொடர்ந்து ஆடினார். அடுத்த பந்திலும் அதே பேட்ஸ்மேன் அவுட் ஆனார். அப்போதும் அது நோபால் என அம்பயர் கூறியதையடுத்து, அம்பயர் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகத் தீர்ப்பு சொல்கிறார் என்று ஷிக்தார் குற்றஞ்சாட்டினார்.
இதனால் கோபம் அடைந்த பேட்ஸ்மேன் அங்கிருந்த ஸ்டெம்பை பிடுங்கி ஷிக்தார் தலையில் பலமாகத் தாக்கினார். இதில் ஷிக்தார் அதே இடத்தில் ரத்த வெளளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஷிக்தரின் உயிர் பிரிந்தது.
இதற்கிடையில், ஷிக்தர் படுகாயமடைந்ததைக் கண்டு பயந்த பேட்ஸ்மேன் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷைக்தரை கொலை செய்த சிறுவனை தேடி வருகிறார்கள்.