இங்கிலாந்தில் முகாம்
இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியில் பங்கேற்றுள்ளார். வெகு தொலைவில் இருந்தாலும், தன் தாய் நாடு படும் அவலத்தை பார்த்த அவர், அங்கிருந்துகொண்டே சமூக சேவையில் இறங்கியுள்ளார். இதற்காக ட்விட்டரை தனது கருவியாக பயன்படுத்தியுள்ளார்.
100 பேர் குழு
ஹனுமா விஹாரை ட்விட்டரில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர். அதில் இருந்து 100 பேர் கொண்ட தன்னார்வ குழு ஒன்றை அமைத்துள்ள அவர், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், பிளாஸ்மாக்கள், உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார். அவர் நாட்டில் இல்லை என்றாலும் தொலைப்பேசி மூலம் அனைத்து விஷயங்களை மேற்பார்வையிட்டு வருகிறார்.
புகழ் வேண்டாம்
இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் என்னை புகழ்ந்துகொள்ள விரும்பவில்லை. இந்த இக்கட்டான சூழலில் அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதே எனது நோக்கமாகும். இதற்காக உதவி உள்ளம் படைத்த 100 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கினேன். எங்களுக்கு வாட்ஸ் அப்பில் குழு உள்ளது. அதன் மூலம் முடிந்தவரை மக்களுக்கு உதவிபுரிய கடுமையாக உழைத்து வருகின்றனர். தனியாளாக இந்த முயற்சியை கையில் எடுத்தேன் தற்போது பல துறைகளில் இருந்தும் எனக்கு உறுதுணையாக வந்து நின்றுள்ளனர். இது வெறும் தொடக்கம் தான்.
மருத்துவமனை படுக்கை இல்லை
இந்த 2ம் அலை மிகவும் பலமானதாக உள்ளது. மருத்துவமனை படுக்கை கிடைப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு கடினமான ஒன்றாக உள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ ரீதியாக தேவைப்படும் உதவிகளை செய்வதே எனது குறிக்கோள். எதிர்காலத்திலும் இதனை தொடர்ந்து செய்வேன் எனத்தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்
கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் பிரபலமான ஒன்று. 3வது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தால் ஆஸ்திரேலியா சுலபமாக தொடரை வென்றிருக்கும். அப்போது இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிந்தனர். அந்த நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட ஹனுமன் விஹாரி நிலைத்து நின்று மட்டை ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை சமன் செய்துகொடுத்தார். 161 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 23 ரன்களை அடித்து ஆஸ்திரேலியாவுக்கு தலைவலி ஏற்படுத்தினார்.
மீண்டும் ஹீரோ
அவரின் அந்த ஆட்டம் இந்திய அணி 4 வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதற்கு பெரும் உதவியாக பார்க்கப்பட்டது. சரியான நேரத்தில் அப்போது நாட்டிற்காக உதவிய அனுமா விஹாரி தற்போது மீண்டும் நாட்டிற்காக சரியான நேரத்தில் உதவிபுரிந்து ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.