டெல்லி: இலங்கையில் சுற்றுப்பயணத்தில் உள்ள அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா, தன்னுடைய அப்பாவுக்கு புத்தம் புதிய கார் ஒன்றை பரிசளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது. 3 தொடர் டெஸ்ட் போட்டிகளையும் தங்கள் வசமாக்கிய இந்திய வீரர்கள் 5 ஒருநாள் போட்டியிலும் வெற்றி மகுடம் சூட தயராகி வருகிறார்கள்.
இந்த நிலையில், அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா தன்னுடைய மகிழ்ச்சியை தனது அப்பாவுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். அதுவும் அவரின் நீண்ட நாள் கனவான சொகுசு கார் ஒன்றை அப்பாவுக்கு பரிசளிக்க முடிவெடுத்தார்.
தான் இலங்கையில் இருந்தாலும் கார் அப்பாவுக்கு கிடைக்கவேண்டும் என்று நினைத்த பாண்டியா தனது சகோதரருக்கு 'வீடியோ கால்' செய்தார். அதன் மூலமே அப்பாவுடன் பேசி, கார் செலக்ட் செய்துள்ளனர். பின்னர் அப்பாவுக்கு பிடித்த கலரில் உள்ள சொகுசு காரை அவருக்கு பரிசளித்தார் பாண்டியா.
இது பற்றி ஹர்திக் பாண்டியா கூறுகையில், " எனக்காக பல தியாகத்தை செய்த என்னுடைய அப்பாவுக்கு கார் கொடுத்து சந்தோஷப்படுத்த நினைத்தேன். அதை இப்போது செய்தேன். அவரின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தேன். அதுவே எனக்கும் அளவில்லா சந்தோஷத்தைக் கொடுத்தது" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.