முச்சதம் அடித்து சாதனை
பெங்கால் மற்றும் இந்திய அணி வீரர் மனோஜ் திவாரி. கடந்த 2004 முதல் பெங்கால் அணிக்காக விளையாடிவருகிறார். இந்திய அணிக்காக திவாரி இதுவரை 12 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த ரஞ்சி சீசனில் ஐதராபாத்திற்கு எதிராக பெங்கால் அணி சார்பில் விளையாடிய திவாரி, 303 ரன்களை குவித்து அவுட்டாகாமல் சாதனை படைத்தார்.
மனோஜ் திவாரி திட்டவட்டம்
இந்நிலையில், இன்னும் பத்து ஆண்டுகள் தான் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுவேன் என்று மனோஜ் திவாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதையடுத்து தான் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பிசியான நேரத்தில், இதற்காக தான் நேரத்தை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
காரணம் கூறும் திவாரி
துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க அதிகப்படியான பயிற்சி தேவை என்றாலும், நம்முடைய பிட்னெசில் அதிக கவனம் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ள திவாரி, அதேபோல, தனக்கு கிரிக்கெட்டில் வர்ணனையாளராக ஆவதைவிட, பயிற்சியாளராக ஆவதே கனவு என்றும் கூறியுள்ளார்.
ஏழைகளுக்கு பயிற்சி அளிப்பேன்
கிரிக்கெட் கோச்சிங் அளிப்பதில் தனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளதாகவும் மனோஜ் திவாரி கூறியுள்ளார். தங்களுடைய தினசரி வாழ்க்கையை நடத்தவே கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அதிகப்படியான கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதே தனது கனவு என்றும் அவர் கூறியுள்ளார்.