ஒரு வாரம் குவாரன்டைன்
2020 ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எட்டு ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளன. சிஎஸ்கே அணி துபாயில் முகாமிட்டுள்ளது. அங்கே ஒரு வாரம் குவாரன்டைன் செய்து கொண்டது.
13 பேருக்கு பாதிப்பு
அப்போது மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒரு சிஎஸ்கே அணி வீரருக்கும் மற்றும் வீரர்கள் அல்லாத 12 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த தகவல் கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பியது.
அந்த வீரர் யார்?
அந்த வீரர் யார் என்ற தகவலை சிஎஸ்கே அணியோ, பிசிசிஐயோ வெளியிடவில்லை. இந்த நிலையில், அது இளம் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தான் என தெரிய வந்துள்ளது. அது குறித்து சிஎஸ்கே அணியை சேர்ந்த ஒருவர் ஊடகங்களிடம் தன் பெயரை வெளியிடாமல் கூறி உள்ளார்.
பயிற்சி முகாமில் தீபக் சாஹர்
தீபக் சாஹருக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்றால் அது மேலும் அதிர்ச்சியை உண்டாக்குவதாக உள்ளது. காரணம், துபாய் செல்லும் முன் சிஎஸ்கே அணி சென்னையில் நடத்திய ஆறு நாள் பயிற்சி முகாமில் அவரும் கலந்து கொண்டார்.
தோனி, ரெய்னாவுடன் நெருக்கம்
அவர் சுரேஷ் ரெய்னா, தோனியுடன் தனி விமானத்தில் சென்னை வந்தார். அப்போது முதல் தோனி, ரெய்னாவுடன் நெருக்கமாக காணப்பட்டார். பல சமயம் அவர் முகக் கவசம் அணிந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் கூட அதைக் காணலாம்.
அபாயம் உள்ளது
தீபக் சாஹர் மற்றும் 12 நபர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்று சென்னையிலேயே ஏற்பட்டதா? அல்லது துபாயில், விமான நிலையத்தில் ஏற்பட்டதா? என்பதே தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. சென்னையில் தொற்று ஏற்பட்டது என்றால் தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு என அந்த முகாமில் பங்கேற்ற பல வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னையில் பாதிப்பா?
அதே சமயம், சென்னையில் இருந்து கிளம்பும் முன் இரண்டு முறை சிஎஸ்கே வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றே முடிவு வந்துள்ளது. அதனால், அங்கே பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
விளக்கம் அளிக்கவில்லை
இதுவரை சிஎஸ்கே அணியோ, பிசிசிஐயோ இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவில்லை. யாருக்கு பாதிப்பு, அடுத்தகட்ட திட்டம் என்ன? என எதையும் கூறவில்லை. சிஎஸ்கே ரசிகர்கள் பாதிக்கப்பட்ட அனைவரும் மீண்டு வர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.