இந்தியா - சீனா மோதல்
இந்தியா - சீனா எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார தேக்க நிலை ஆகியவற்றுக்கு இடையே போர் அச்சம் வளர்ந்து வந்தது. இந்த நிலையில், திங்கள் அன்று இரவு மோதல் நடைபெற்றது.
இரு தரப்பிலும் பலி
இரு தரப்பிலும் இராணுவ வீரர்கள் பலியாகினர். 20 இந்திய வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்றும், 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த மோதல் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
மருத்துவர் கருத்து
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் மது தோட்டப்பில்லில். வீரர்களின் சவப் பெட்டிகளில் "பிஎம் கேர்ஸ்" என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்குமா என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது என கூறி இருந்தார்.
சர்ச்சை
பிரதமர் நிவாரண நிதியான பிஎம் கேர்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்தது மது தோட்டப்பில்லில் போட்ட ட்வீட். மேலும், இது சிஎஸ்கே அணியின் கருத்தா? என்ற கோணத்திலும் அணுகினர். இது குறித்து சிஎஸ்கே அணியின் கவனத்துக்கு சென்றது.
பணி நீக்கம் செய்த சிஎஸ்கே
பின்னர், சிஎஸ்கே அணி மருத்துவர் மது தோட்டப்பில்லில்-ஐ அணியின் மருத்துவர் என்ற பணியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இணையத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து இந்த முடிவை சிஎஸ்கே எடுத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
என்ன காரணம்?
இது பற்றி சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மருத்துவர் மது தோட்டப்பில்லில்-இன் தனிப்பட்ட ட்வீட் பற்றி தங்களுக்கு தெரியாது என்றும், அவரை பணி நீக்கம் செய்வதாகவும், நிர்வாகத்துக்கு தெரியாமல், மோசமான சுவையில் போடப்பட்ட அவரது ட்வீட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறி உள்ளது.
இராணுவ அதிகாரி தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சீனிவாசன் என்பதும், சிஎஸ்கே அணி கேப்டன் தோனி இராணுவத்தில் கௌரவ லெப்டினென்ட்டாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.