சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை விட மனம் இல்லாத என்.சீனிவாசன், அதற்கு இடையூறாக இருக்கும் தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமென்ட்ஸ் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து புதிய நிறுவனத்திற்கு மாற்றியுள்ளார்.
இந்த முடிவை சென்னையில் இன்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய அவசர போர்டு கூட்டத்தில் சீனிவாசனே தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அடிப்படையில் தொழிலதிபரான என்.சீனிவாசன், இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். கிரிக்கெட் வாரியத்தின் ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், சீனிவாசனுக்குச் சொந்தமானது. இந்தியா சிமெண்ட்ஸ் மூலமாகத்தான் இதுவரை இந்த அணியை நிர்வகித்து வருகிறார் சீனிவாசன்.
ஆனால் ஐபிஎல் மேட்ச்பிக்ஸிங்கில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கி்க் கொண்டார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர். இந்த சம்பவம் நடந்தபோது கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தவர் சீனிவாசன். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சிக்கலானது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சீனிவாசன் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி விட்டது. இருப்பினும் பிசிசிஐ பதவி அல்லது ஐபிஎல் அணி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே சீனிவாசன் வகிக்க முடியும் என்று கூறி விட்டது.
இதனால் பிசிசிஐ தலைவர் பதவியில் கனவில் இருந்து வந்த சீனிவாசனுக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது. இதையடுத்து இந்தத் தடையிலிருந்து தப்பிக்கும் நடவடிக்கையில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். அதன்படி முதல் கட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் வளையத்திலிருந்து அவர் விடுவித்துள்ளாராம்.
அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இனிமேல் இந்தியா சிமெண்ட்ஸ் பார்த்துக் கொள்ளாது. மாறாக புதிய நிறுவனத்திடம் அதை சீனிவாசன் மாற்றியுள்ளாராம். இதுகுறித்து இன்றைய கிரிக்கெட் வாரியக் கூட்டத்தின்போது உறுப்பினர்களிடம் சீனிவாசன் தெரிவித்தாராம்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வசம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்றப்பட்டுள்ளதாம். இதுகுறித்த தகவல் பாம்பே பங்குச் சந்தைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இந்த புதிய நிறுவனம் யாருடையது என்பது தெரியவில்லை.