இங்கிலாந்து: ஐபிஎல் 2020 சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஒருவழியாக கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கும் நேரம் வந்துவிட்டது. நாளை மறுநாள் (செப்.19) மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன.
31 போட்டிகள் மீதமுள்ள நிலையில், 27 நாட்களில் அனைத்து போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளன.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டாம் பாதியில் மும்பையும் சென்னையும் மோதுகின்றன. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் மும்பை அணி நான்காம் இடத்தில் உள்ளது. ரன் ரேட் +0.062. கைவசம் 7 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் முன்னேற, குறைந்தபட்சம் 4 போட்டிகளிலாவது அந்த அணி வெற்றிப் பெற்றாக வேண்டும். 5ல் வென்றால் நிச்சயம் பிளே ஆஃப் இடம் உறுதி. சென்னை அணியை பொறுத்தவரை, இந்த சீரிஸில் அபார தொடக்கம் கிடைத்துள்ளது. கடந்த சீசனில் இதே அமீரகத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முதலாக ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. எனினும், இந்த 2021 சீசனில், இந்தியாவில் நடந்த முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கூட இவ்வளவு ரன் ரேட் கிடையாது. தற்போது சிஎஸ்கே 10 புள்ளிகள் வைத்திருக்கிறது. மேற்கொண்டு இன்னும் 6 புள்ளிகள் சேர்த்தாலே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடலாம். அதாவது, இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே போதும். கைவசம் 7 போட்டிகள் மீதமுள்ளன.
இந்நிலையில், சென்னை vs மும்பை போட்டி குறித்து betway.com தளத்தில் கட்டுரை எழுதியுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், "ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி நன்றாக விளையாட வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த அணி எப்போதும் தொடரின் தொடக்கத்தில் தடுமாறி, பிறகு மீண்டு வந்து சிறப்பாக விளையாடும். இதுதான் கடந்தகால வரலாறு. ஆனால், நாம் இப்போது தொடரில் பாதியை கடந்துவிட்டோம். மும்பைக்கு இன்னும் 6 போட்டிகளே மீதமுள்ளன. எப்போதும் தொடரின் தொடக்கத்தில் தடுமாறும் மும்பை, இப்போதும் அதே போன்று தடுமாறினால், கம்பேக் கொடுப்பதற்கு போதுமான போட்டிகள் பாக்கி இல்லை. நீங்கள் 3 போட்டிகளில் தோற்றாலே கதை முடிந்துவிடும். மும்பை அணி கோப்பையை வெல்ல வேண்டுமெனில், சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் பந்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த வேண்டும். பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், தொடரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். எனினும், மும்பை மீண்டும் கோப்பை வெல்லும் அளவுக்கு திறன் கொண்டுள்ளது.
அதேசமயம், கடந்த சீசனில் மோசமாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறை மீண்டும் தடுமாறும் என்று அனைவரும் கணித்தார்கள். ஆனால் 'Dad's Army' என்று அழைக்கப்படும் சென்னை அணி, யாருமே எதிர்பார்க்காத வகையில் மிக சிறப்பாக விளையாடியது. அவர்களின் வெளிநாட்டு வீரர்கள் ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி மற்றும் சாம் கர்ரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், இந்த நான்கு மாத இடைவெளி காரணமாக, சிஎஸ்கே அணியின் சீனியர் வீரர்கள் மீண்டும் அதே ஃபார்மை வெளிப்படுத்துவார்களா என்று தெரியவில்லை. அப்படி வெளிப்படுத்தினால், இந்த முறை ஐபிஎல் கோப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் என்று கூறுவேன். மற்ற அணிகள் அவர்களை சாதாரணமாக எடைபோட, சிஎஸ்கே சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறன்" என்று கூறியுள்ளார்.
ஒரே ஒரு போட்டிதான்..ஒட்டுமொத்த தலையெழுத்தும் மாறியது.. ஹாட்ரிக் நாயகனை தட்டித்தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்