"அடிக்க முடியல போங்கடா"
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியில், ஓப்பனர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் ரன்கள் அடிக்க ரொம்பவே சிரமப்பட்டனர். குறிப்பாக, ராஜஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய ருதுராஜ், இப்போட்டியில் பந்துகளை க்ளீயர் பண்ண ரொம்பவே சிரமப்பட்டார். 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ், அர்ஷ்தீப் சிங் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது ஷாட்டில் அத்தனை விரக்தி இருந்தது. "அடிக்க முடியல போங்கடா" என்பது போல் இருந்தது ஷாட்.
அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்
அதன் பிறகு களமிறங்கிய மொயீன் அலி, "இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்" என்று 6 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல், அதே அர்ஷ்தீப் ஓவரில் கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தன்னால் அடிக்க முடியவில்லையே என்ற எந்த குற்ற உணர்ச்சியும், வேதனையும் அவரிடம் இருப்பது போன்றே தெரியவில்லை. அவர் பாட்டுக்கு நடையைக் கட்ட, அடுத்து வந்த உத்தப்பா வெறும் 2 ரன்களில் ஜோர்டன் பந்தில் கேட்ச் கொடுத்து, "அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் பார்சல்" என்று மோடில் வெளியேறினார். பிறகு களமிறங்கிய ராயுடுவும் 4 ரன்களில் அவுட்டானார்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு
கடந்த போட்டியில், சென்னை அணி 130 ரன்களையாவது கடக்க முடிந்தது. இப்போது பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்திருக்கும் சென்னை, பஞ்சாபுக்கு எதிராக 100 ரன்களை தாண்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, சென்னை சூப்பர் கிங்ஸ் நிலைமை சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியிலும் தோற்றால், தொடர்ந்து மூன்றாவது போட்டியில் சிஎஸ்கே தோல்வியை சந்திக்க நேரிடும்.
மிகப்பெரும் பின்னடைவு
தல தோனி, நல்ல ரன் ரேட் இருக்கும் போது களமிறங்கினால் கூட உருட்டி உருட்டி தான் விளையாடுவார். இப்போது அணியே தள்ளாடிக் கொண்டிருக்கும் போது, அவர் களமிறங்கினால் எப்படி அடிக்கப் போகிறார் என்பதை நினைத்தாலே கலக்கமாக உள்ளது. டெப்த் பேட்டிங் லைன்-அப் கொண்ட சென்னை அணி, பேட்டிங்கில் இப்படி தடுமாறி வருவது உண்மையில் மிகப்பெரும் பின்னடைவு தான். கடைசிக் கட்டத்தில் பிராவோ, ஜடேஜா ஆகியோர் ஏதாவது அடித்தால் 120 - 140 ரன்கள் வரை எடுக்க வாய்ப்புள்ளது.