சொதப்பிய சிஎஸ்கே
ஐபிஎல் 2020 தொடரில் சிறப்பான போட்டிகளை அளிக்க முடியாமல் ப்ளே ஆப் சுற்றிற்கும் முன்னேறாமல் தொடரிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே. அந்த அணியின் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் அணியிலிருந்து வெளியேறிய நிலையில் அணி சிறப்பாக விளையாட முடியாமல் திக்கு முக்காடியது.
சுரேஷ் ரெய்னா இணைப்பு
இந்நிலையில் தற்போது பலமான கூட்டணியுடன் சுரேஷ் ரெய்னாவும் அணியில் இணைந்துள்ளார். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு உள்ளிட்டோர் மட்டுமின்றி புதிய இணைப்புகளும் அணியில் இணைந்துள்ளது பலமாக பார்க்கப்படுகிறது. இந்தமுறை கோப்பையை கைப்பற்றும் தீவிரத்துடன் கேப்டன் மட்டுமின்றி மற்ற அணிவீரர்களும் உள்ளனர்.
ஆடாத சிஎஸ்கே வீரர்கள்
ஆனால் சிஎஸ்கேவில் சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, எம்எஸ் தோனி உள்ளிட்டவர்கள் கடந்த சில மாதங்களாக சர்வசேத போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளதாகவும் அதனால் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை அளிப்பது கடினம் என்றும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஜடேஜாவும் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பார்மில் இல்லாத 4 வீரர்கள்
தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ மூலம் பேசியுள்ள அவர், சிஎஸ்கேவின் 7 முக்கிய வீரர்களில் 4 பேர் சிறப்பான பார்மில் இல்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளதாகவும் பாப் டூ பிளசிசும் சிறப்பாக விளையாடுவார் என்றும் ஆனால் மற்ற 4 பேர் சிறப்பான பார்மில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி ஏற்படும்
இந்நிலையில் கடந்த 2008 முதல் ஐபிஎல்லில் சிறப்பாக ரன்களை குவித்துள்ள ரெய்னாவின் ஆட்டத்தை நம்பியே இந்த சீசனில் சிஎஸ்கே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் இந்த சீசனில் சிஎஸ்கே நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜடேஜாவை துவக்க ஆர்டரில் அதிகமாக பயன்படுத்தலாம் என்றும் தோனியும் சிறப்பாக ஆட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.