2020 ஐபிஎல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது 2020 ஐபிஎல் தொடர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த தொடருக்கான அட்டவணையை மிகத் தாமதமாக ஞாயிறு அன்று வெளியிட்டது பிசிசிஐ. அந்த தாமதத்துக்கு காரணம் சிஎஸ்கே அணி தான்.
சிஎஸ்கே தயார்நிலை
சிஎஸ்கே அணி தான் மற்ற அணிகளை விட முன்பே ஐபிஎல் தொடருக்கு தயார் ஆனது. ஆகஸ்ட் 15 முதல் 20 வரை சென்னையில் பயிற்சி முகாம் நடத்தியது. அதன் பின் துபாய் கிளம்பி சென்றது. அந்த அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்த நிலையில், துபாயில் முதல் வார குவாரன்டைன் முடிவில் அந்த அணியில் இரு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அது பிசிசிஐ திட்டங்களை தள்ளிப் போட்டது. சிஎஸ்கே அணியின் பயிற்சியும் தள்ளி வைக்கப்பட்டது.
ரெய்னா விலகல்
இதற்கிடையே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா அச்சம் காரணமாக இந்தியா கிளம்பிச் சென்றார். அவர் 2020 ஐபிஎல் தொடரில் இனி பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்தது. அவருக்கும், தோனி, சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே மோதல் என கூறப்பட்டது.
ஹர்பஜன் சிங் முடிவு
அவரை அடுத்து ஹர்பஜன் சிங் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதனால், சிஎஸ்கே அணி அடி மேல் அடி வாங்கியது. இரண்டு அனுபவ வீரர்கள் விலகியதால் சிஎஸ்கே அணி இந்த தொடரில் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.
பயிற்சி துவக்கம்
இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் பாதிக்கப்பட்ட வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் பயிற்சி செய்யத் துவங்கினர். பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் நல்ல மனநிலையுடன் காட்சி அளித்தது அந்த அணி மீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டனர்.
ரெய்னா இணைய வாய்ப்பு
சுரேஷ் ரெய்னா பிரச்சனை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அவர் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணையக் கூடும் என ஒரு தகவல் வலம் வருகிறது. ரெய்னா தன் வீட்டிலேயே பயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாரும் இணை இல்லை
அஸ்வின், ஜடேஜா போன்ற அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் ஆடுகிறார்கள். நல்ல பார்மில் இருக்கும் இளம் சுழற் பந்துவீச்சாளர்கள் பலரும் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் அணிகளில் இடம் பெறாத, சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.
உள்ளூர் வீரர்கள்
அவர்களை விட்டால் உள்ளூர் ரஞ்சி போட்டிகளில் ஆடிய வீரர்கள் மட்டுமே உள்ளனர். தற்போது சிஎஸ்கே அணி 4 - 5 சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரை ஹர்பஜன் சிங்கிற்கு மாற்று வீரராக தேர்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் யாருமே ஹர்பஜன் சிங் அனுபவத்திற்கு ஈடாக முடியாது என்றாலும் சிஎஸ்கேவிற்கு வேறு வழியில்லை.