ரெய்னா விவகாரம்
சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடர் முழுவதும் ஆட மாட்டார் என சிஎஸ்கே அணி அவர் இந்தியா சென்ற போது அறிவித்தது. ஆனால், இந்தியா சென்ற சுரேஷ் ரெய்னா தான் எப்போதும் சிஎஸ்கே அணிக்கு திரும்பக் கூடும் எனக் கூறினார்.
கருத்து வேறுபாடுகள்
சிஎஸ்கே நிர்வாகத்துக்கும், ரெய்னாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. அதே சமயம், ரெய்னாவுக்கு மாற்று வீரரை தேர்வு செய்யாமல் உள்ளது சிஎஸ்கே.
விலகல்
2020 ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா முற்றிலுமாக விலகி விட்டார் என்றால் சிஎஸ்கே அணி அவருக்கு மாற்று வீரர் ஒருவரை தேர்வு செய்ய முடியும். ஹர்பஜன் சிங்கும் விலகி உள்ள நிலையில் அவருக்கும் மாற்று வீரர் ஒருவரை சிஎஸ்கே அணி தேர்வு செய்ய முடியும்.
மாற்று வீரர் தேர்வு
ஆனால், இதுவரை அவர்கள் இருவருக்குமான மாற்று வீரர்களை சிஎஸ்கே அணி தேர்வு செய்யவில்லை. ஹர்பஜன் சிங்கிற்கு மாற்றாக சில உள்ளூர் வீரர்களை சிஎஸ்கே பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம் ரெய்னாவுக்கு மாற்றாக இங்கிலாந்து வீரரை தேர்வு செய்ய உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
தாவித் மலன் முதல் இடம்
இங்கிலாந்து பேட்ஸ்மேன் தாவித் மலன் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் போட்டிக்கு, போட்டி சிறப்பாக ஆடி அசத்தினார். அதன் காரணமாக பேட்ஸ்மேன்களுக்கான சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.
உண்மையா?
அவரை சிஎஸ்கே அணி தேர்வு செய்ய முயன்று வருவதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை.
விளக்கம்
இதுபற்றி சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனும் விளக்கம் கூறி உள்ளார். இந்த செய்தி தனக்கும் ஒரு செய்தி மட்டுமே என்றும், சிஎஸ்கே அணியின் வெளிநாட்டு வீரருக்கான இடம் இல்லை எனவும் கூறி இருக்கிறார்.
மீண்டும் சுரேஷ் ரெய்னா
இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணிக்கே திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரெய்னா விவாகரத்தில் கேப்டன் தோனி தான் முடிவு எடுக்க வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.