ஐபிஎல் அணிகள்
2020 ஐபிஎல் தொடருக்கு அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மட்டும் அபுதாபியில் முகாமிட்டுள்ளன. சிஎஸ்கே உள்ளிட்ட மற்ற ஆறு அணிகளும் துபாயில் தங்கி உள்ளன.
சிஎஸ்கே அணியில் பாதிப்பு
சிஎஸ்கே அணி தவிர மற்ற ஏழு அணிகளும் பயிற்சியை துவக்கி உள்ளன. சிஎஸ்கே அணியில் முதல் வார குவாரன்டைன் முடிவில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதில் இரண்டு பேர் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்.
இரண்டு வீரர்கள்
வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெயிக்வாட் தான் அந்த இரண்டு வீரர்கள். இதை அடுத்து சிஎஸ்கே அணி மட்டும் கூடுதலாக குவாரன்டைனில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்ற அணிகள் ஆகஸ்ட் 27, 28 தேதிகளில் பயிற்சி செய்யத் துவங்கின.
ரெய்னா, ஹர்பஜன் சிங்
இதன் இடையே சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினர். இது அந்த அணிக்கு பெரும் இழப்பாகும். ரெய்னா மீண்டும் வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும் அது சந்தேகம் தான்.
சறுக்கல்
கொரோனா வைரஸ் தாக்கம், முக்கிய வீரர்கள் இழப்பு என சறுக்கலை சந்தித்து வந்த சிஎஸ்கே அணி, வெள்ளிக்கிழமை முதல் வலைப் பயிற்சியை துவக்கி உள்ளது. அந்த 13 பேர் தவிர மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை இரண்டு பரிசோதனைகள் செய்து உறுதி செய்த பின்னரே பயிற்சி செய்யத் துவங்கி உள்ளனர்.
தோனி அதிரடி
பயிற்சியின் போது தோனி ரவீந்திர ஜடேஜா, பியுஷ் சாவ்லா மற்றும் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சை சந்தித்தார். அதில் அதிரடி ஷாட்கள் ஆடி தெறிக்கவிட்டார். ஜடேஜா பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து மிரட்டினார். அந்த பயிற்சியில் நல்ல பார்மில் இருந்தார் தோனி.
ஷேன் வாட்சன்
தோனிக்கு அடுத்த வலையில் ஷேன் வாட்சன் பேட்டிங் பயிற்சி செய்து வந்தார். அவர் சுழற் பந்துவீச்சாளர் கரன் சர்மா வீசிய பந்துகளை பறக்க விட்டு வந்தார். அவரும் நல்ல பார்மில் இருந்தார். இந்த பயிற்சி வீடியோ சிஎஸ்கே அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு, வைரல் ஆகி உள்ளது.
14 நாட்கள் தனிமை
சிஎஸ்கே அணியில் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமையில் உள்ளனர். மற்ற வீரர்கள் பயிற்சியை துவக்கிய நிலையில் தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட் இருவரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். அதன் முடிவில் அவர்களுக்கு இரண்டு பரிசோதனை செய்யப்படும்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
இரண்டு சோதனைகளிலும் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரிந்தால் மட்டுமே அவர்கள் மீண்டும் பயிற்சி செய்ய வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சில சறுக்கல்கள் இருந்தாலும் சிஎஸ்கே அணி பயிற்சி செய்தது அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.