2020 ஐபிஎல்-இல் சிஎஸ்கே
2020 ஐபிஎல் தொடருக்கு சென்னையில் இருந்து துபாய் கிளம்பி வந்த போது சிஎஸ்கே அணி நல்ல நிலையில் இருந்தது. ஆனால், துபாயில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது அந்த அணியின் திட்டங்களை புரட்டிப் போட்டது.
ரெய்னா, ஹர்பஜன் விலகல்
அதன் பின் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை அளித்தது. இருவருமே அனுபவ வீரர்கள் என்பதால் அது பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
மாற்று வீரர்?
இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தும் சிஎஸ்கே அணி இதுவரை மாற்று வீரர்களை தேர்வு செய்யவில்லை. அப்படி என்றால் சிஎஸ்கே அணியின் திட்டம் என்ன என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது.
தோனி முடிவு
ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், கேப்டன் தோனி ஹர்பஜன் சிங் இழப்பை எப்படி ஈடு கட்டப் போகிறார்? பியுஷ் சாவ்லாவை அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக தோனி ஆட வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் பயிற்சியில் தீவிரமாக இடம் பெற்று இருப்பதே அதற்கு சான்று.
சென்னை ஆடுகளம்
உண்மையில் பியுஷ் சாவ்லா சென்னை ஆடுகளதுக்காகவே சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று இருந்தால் சிஎஸ்கே அணி எட்டு போட்டிகளை சென்னை ஆடுகளத்தில் ஆடும். அப்போது சுழற் பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தி எதிரணிகளை திணற வைக்க தோனி திட்டமிட்டார்.
கூடுதல் சுழற் பந்துவீச்சாளர்
அதற்காகவே கூடுதல் சுழற் பந்துவீச்சாளரை 2020 ஐபிஎல் ஏலத்தில் வாங்க சிஎஸ்கே தீவிரமாக களமிறங்கியது. ஏற்கனவே, அணியில் ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர், கரன் சர்மா என பல சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்த நிலையில், பியுஷ் சாவ்லாவையும் வாங்கியது சிஎஸ்கே அணி.
சிஎஸ்கே திட்டம் என்ன?
தற்போது ஹர்பஜன் சிங் இல்லாத நிலையில், சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் பியுஷ் சாவ்லா, ஜடேஜா ஆகியோருடன் இம்ரான் தாஹிர் அல்லது மிட்செல் சான்ட்னரை அணியில் ஆட வைக்க சிஎஸ்கே திட்டமிடும்.
5 சுழற் பந்துவீச்சாளர்கள்
அணியில் ஐந்து சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் சிஎஸ்கே அணி சுழற் பந்துவீச்சை ஆயுதமாக வைத்தே இந்த ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் ஜடேஜா, பியுஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர் முக்கியத்துவம் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
தீபக் சாஹர் சிக்கல்
வேகப் பந்துவீச்சில் தான் சிஎஸ்கே அணி சிக்கலில் உள்ளது. வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர் தற்போது அதில் இருந்து மீண்டு பயிற்சி செய்ய உள்ளார். எனினும், அவர் முழு அளவில் தயாராகி விட்டாரா? என்பதை பொறுத்தே அவரை ஆட வைப்பது குறித்து முடிவு செய்ய முடியும்.