சிஎஸ்கே அபார திட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரை சிறப்பாக ஆட துவக்கம் முதலே திட்டமிட்டு செயல்பட்டு வந்தது. ஏப்ரல் - மே மாதத்தில் நடக்க இருந்த ஐபிஎல் தொடருக்கு மார்ச் மாத துவக்கத்திலேயே பயிற்சி செய்யத் துவங்கியது.
அச்சம்
அப்போது அனைத்து வீரர்களும் அதில் கலந்து கொண்டனர். இதன் இடையே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது. இந்த முறை வீரர்கள் அச்சத்துடனே சிஎஸ்கே அணியில் பங்கேற்றுள்ளனர்.
ஹர்பஜன் சிங், ஜடேஜா
கொரோனா வைரஸ் அச்சம் பலரது மனதையும் மாற்றி உள்ளது. துபாய் செல்லும் முன் சென்னையில் நடந்த சிஎஸ்கே பயிற்சி முகாமில் ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஜடேஜா துபாய்செல்லும் முன் அணியுடன் இணைந்தார்.
நேராக வருவார்
ஆனால், ஹர்பஜன் சிங் அப்போதும் இணையவில்லை. அவர் நேரடியாக துபாய் வந்து அணியுடன் இணைவார் என கூறப்பட்டது. மற்ற வீரர்கள் துபாயில் ஒரு வாரம் குவாரன்டைனில் இருந்தனர். அங்கே சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
ரெய்னா நிலை
அந்த தகவல் சிஎஸ்கே அணியில் மாற்றங்களை உண்டாக்கி உள்ளது. அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பி உள்ளார். அவர் இந்த சீசனில் இனி பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும், அவர் தான் அணிக்கு மீண்டும் திரும்ப உள்ளதாக கூறி உள்ளார்.
பதில் சொல்லவில்லை
அந்த குழப்பம் ஒரு புறம் இருக்க மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் தான் துபாய் வர இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், செப்டம்பர் 3 இரவு வரை எந்த பதிலும் சொல்லவில்லை.
சிஎஸ்கே தயார்நிலை
இதை அடுத்து ஹர்பஜன் சிங் இல்லாத அணியை தயார் செய்ய சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு பலத்த அடி என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கடந்த சீசனில் கேப்டன் தோனியின் துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டார் ஹர்பஜன் சிங்.
ஆடுகளங்கள்
முக்கிய போட்டிகளில் எல்லாம் அவரை வைத்து எதிரணியை திணற வைத்தார் தோனி. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த நிலையில், ஹர்பஜன் சிங் ஆடவில்லை என்றால் அது சிஎஸ்கே அணிக்கு பெரிய இழப்பாகும்.
ரசிகர்கள் ஏமாற்றம்
ஹர்பஜன் சிங் முதலில் சிஎஸ்கே அணியுடன் துபாய் செல்வதாக கூறினார். பின் அவராக துபாய் வருவதாக கூறினார். ஆனால், தற்போது அவர் ஆடவே போவதில்லை என கூறப்படுவது சிஎஸ்கே ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றமடைய வைத்துள்ளது.