2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறது சென்னை சிஎஸ்கே அணி. துபாயில் முகாமிட்டுள்ள அந்த அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. அந்த அணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது புதிதாக ருதுராஜ் கெயிக்வாட் விஷயமும் சேர்ந்து கொண்டுள்ளது.
சிஎஸ்கே சிக்கல்
துபாய் வந்த முதல் வாரத்தில் சிஎஸ்கே வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் உதவியாளர்கள் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபப்ட்டது. அதனால், சிஎஸ்கே அணியில் பயிற்சி தாமதம் ஆனது.
ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகல்
இதற்கிடையே சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் என இரண்டு மூத்த வீரர்கள் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினர். அவர்கள் இருவரும் அணியின் முக்கிய வீரர்கள் என்பதால் அந்த இழப்பு மிகப் பெரியதாக கருதப்பட்டது. எனினும், தோனி அனைத்தையும் சமாளித்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் அந்த அணி இருந்தது.
பயிற்சி துவக்கம்
தீபக் சாஹர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டார். தோனி உட்பட மற்ற வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதனால், சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருந்தனர். இந்த நிலையில் தான் ருதுராஜ் கெயிக்வாட் பற்றிய தகவல் வெளியானது.
ருதுராஜ் கெயிக்வாட் நிலை
தீபக் சாஹர் போலவே ருதுராஜ் கெயிக்வாட்டும் 14 நாட்கள் குவாரன்டைனில் இருந்தார். அதன் முடிவில் இரண்டு பரிசோதனைகள் எடுக்கப்பட்ட போது அவருக்கு அதில் பாஸிடிவ் என முடிவு வந்தது. இதை அடுத்து அவர் மீண்டும் குவாரன்டைனில் இருந்து வருகிறார்.
எப்போது வருவார்?
ருதுராஜ் கெயிக்வாட் அடுத்த சில நாட்களில் மீண்டும் எடுக்கப்படும் அடுத்தடுத்த இரண்டு கொரோனா வைரஸ் பரிசோதனைகளில் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே அவர் மீண்டும் சிஎஸ்கே அணியுடம் இணைய முடியும். அவர் அணியில் இணைந்தாலும் போட்டிகளில் ஆடும் அளவுக்கு உடற்தகுதியுடன் இருப்பாரா? என்பது சந்தேகமே.
மாற்று வீரர் இல்லை
சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகிய பின் இதுவரை சிஎஸ்கே அணி அவர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்யவில்லை. தற்போது ருதுராஜ் கெயிக்வாட் கொரோனா வைரஸில் சிக்கி இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணி மூன்றாவது வீரரை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
சிக்கலில் தோனி
கேப்டன் தோனி தான் மாற்று வீரரை தேர்வு செய்யும் விஷயத்தில் முடிவு செய்ய வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் கூறி உள்ள நிலையில், அவர் என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ருதுராஜ் கெயிக்வாட்டும் இல்லாமல் போனால் அணித் தேர்வில் சிக்கல் எழக் கூடும்.