சிஎஸ்கே அணியின் பூஜை
ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து அந்த அணி சார்பில் சென்னை தியாகாராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் பூஜை செய்யப்பட்டது. அப்போது ஐபிஎல் கோப்பையையும் பூஜையில் வைத்து அணி உரிமையாளர் சீனிவாசன், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் ரூபா குருநாத் ஆகியோர் வழிபட்டனர்.
பெரும் மகிழ்ச்சி
சாமி தரிசனத்திற்கு பின்னர் சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் எங்கள் நிறுவனம் தொடங்கப்பட்டு 75-வது வருடத்தில் கோப்பையை கைப்பற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வாங்க முடியாத நிலையில் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்ற முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் எம்.எஸ்.தோனி நிச்சயம் சென்னை அணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தற்போது அதே போல நடந்துள்ளது.
Recommended Video
வெற்றி விழா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை, சேப்பாக்கம் மைதானத்தில் பெரிதாக கொண்டாடவுள்ளோம். டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்து தோனி இந்தியா வந்தவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. வெற்றி கோப்பையை முதல்வரிடம் தோனி கொடுக்க உள்ளார் எனத் தெரிவித்தார்.
மெகா ஏலம்
இதன்பின்னர் அடுத்தாண்டு மெகா ஏலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீனிவாசன், சென்னை அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது பிசிசிஐ போடும் விதிமுறைகளைப் பொறுத்தே அமையும். ஆனால் சென்னை அணியில் நிச்சயமாக தோனி இடம் பெறுவார். தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி இல்லை, சிஎஸ்கே அணி இல்லாமல் தோனி இல்லை. இதனை பிரிக்கவே முடியாது எனக்கூறினார்.
ரெய்னாவின் நிலை
இந்நிலையில் அடுத்தாண்டு ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை தக்கவைப்பதில் சிஎஸ்கே நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்தவர் ரெய்னா. கடந்தாண்டு சில கருத்துவேறுபாடுகளால் தொடரில் இருந்து விலகினார். அதே போல இந்தாண்டு ஃபார்ம் அவுட்டானதால் வெளியே அமரவைக்கப்பட்டார். எனினும் தோனியை போன்று ரெய்னாவும் அணியில் சேர்க்கப்படலாம் எனக்கூறப்பட்டது.
சிஎஸ்கே தயக்கம்
ரெய்னாவையும் சிஎஸ்கேவில் தக்கவைப்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முதலில் பதலளிக்க தயங்கிய சீனிவாசன், பின்னர் அது குறித்து தற்போது எந்தவித பதிலையும் கூற முடியாது என தெரிவித்தார். எனவே ரெய்னாவை தக்கவைக்க சிஎஸ்கே நிர்வாகம் தயாராக இல்லை என்பது போல தெரிகிறது.