2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக எட்டு ஐபிஎல் அணிகளும் அந்த நாட்டில் முகாமிட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர மற்ற அணிகள் ஒரு வார குவாரன்டைன் முடிந்து பயிற்சி செய்யத் துவங்கி உள்ளன.
13 பேருக்கு கொரோனா வைரஸ்
இந்த நிலையில், சிஎஸ்கே அணி மட்டுமே ஏன் பயிற்சி செய்ய துவங்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அந்த அணியில் ஒரு பந்துவீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.
யார் அந்த வேகப் பந்துவீச்சாளர்?
அந்த வேகப் பந்துவீச்சாளர் இந்திய அணியில் சமீபத்தில் இடம் பெற்றவர் என்ற தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. அதை வைத்து அந்த ஒரு வீரர் தீபக் சாஹர் அல்லது ஷர்துல் தாக்குர் தான் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மேலும் 12 பேருக்கு பாதிப்பு
ஒரு வேகப் பந்துவீச்சாளர் தவிர அணியை சேர்ந்த மற்ற அதிகாரிகள், பணியாளர்கள் குழுவில் 12 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் சமூக வலைதளப் பிரிவில் பணியாற்றும் இருவரும் அடக்கம்.
விமர்சனம்
தற்போது வரை வந்துள்ள தகவல்களின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த பணியாளர்களுக்கே அதிக பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணியின் ஆறு நாள் சென்னை பயிற்சி முகாம் குறித்த விமர்சனம் எழுந்துள்ளது.
சிஎஸ்கே அணி வீரர்கள் மட்டும்..
அனைத்து அணிகளும் முக்கிய நகரங்களில் ஒன்று கூடி, பின் இரண்டு நாட்களுக்குள் அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் சென்றன. ஆனால், சிஎஸ்கே அணி வீரர்கள் மட்டும் ஒரு வாரம் சென்னையில் தங்கி ஆறு நாள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
பயிற்சி முகாம் நடத்தியது சரியா?
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில், சென்னையில் பயிற்சி முகாம் நடத்தியது சரியா? என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. அது தான் காரணமா? என்பது தெரியாவிட்டாலும் அந்த கேள்வி நியாயமான ஒன்றாகவே உள்ளது.
யோசனை கூறியது கேப்டன் தோனி
சென்னை பயிற்சி முகாம் நடத்த யோசனை கூறியது கேப்டன் தோனி தான் என சமீபத்தில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறி இருந்தார். தல தோனி தப்புக் கணக்கு போட்டு விட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கு விளக்கம் வேண்டும்
இதுவரை சிஎஸ்கே அணியோ, ஐபிஎல் நிர்வாகமோ கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பற்றி எந்த தகவலையும் கூறவில்லை. யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது? சென்னை பயிற்சி முகாம் தான் இதற்கு காரணமா? என்ற கேள்விகளுக்கு சிஎஸ்கே அணி விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும்.