20ம் தேதி அணிகள் பயணம்
ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதி வரையில் யூஏஇயில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் ஐபிஎல்லின் 8 அணிகளும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வரும் 20ம் தேதிவாக்கில் அனைத்து அணிகளும் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளன.
தயாராகும் சிஎஸ்கே அணி வீரர்கள்
சிஎஸ்கே அணி வீரர்களும் வரும் 19ம் தேதி சென்னையில் கூடி அதன்பின்பு சார்ட்டர்ட் விமானங்கள் மூலம் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். மேலும் பர்ஜ் கலிஃபா அருகில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலின் மூன்று ப்ளோர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு அணி வீரர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.
சிஎஸ்கே அணிவீரர்கள் பயணம்
ஐபிஎல் குறித்து பிசிசிஐ வகுத்துள்ள விதிமுறைகளின் படி அணி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்து சென்றாலும் பயிற்சிகள் மற்றும் போட்டிகளின்போது அவர்களுடன் நெருக்கமாக இருக்க அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சிஎஸ்கே அணியினர் தங்களது குடும்பத்தினர் இல்லாமல் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப போட்டிகளில் பங்கேற்கவில்லை
மேலும் கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் இங்கிலாந்து -ஆஸ்திரேலிய தொடர்கள் ஐபிஎல்லின் துவக்கத்தில் நடைபெறவுள்ளநிலையில் அந்த அணிகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள், டிவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், இம்ரான் தஹிர் மற்றும் சாம் குர்ரான், ஜோஷ் ஹாசல்வுட் போன்ற சிஎஸ்கே வீரர்கள் ஐபிஎல்லின் ஆரம்ப போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.