கேள்விக்குறியான பயிற்சிகள்
ஐபிஎல் 2020 தொடரில் பங்கேற்கும்வகையில் கடந்த 21ம் தேதி யூஏஇ சென்றடைந்த சிஎஸ்கே அணி வீரர்கள் குவாரன்டைனில் ஈடுபட்ட நிலையில் அணியின் வீரர்கள் தீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்கள் தனியாக குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து அணியின் பயிற்சி போட்டிகள் கேள்விக்குறியானது.
துவங்கிய பயிற்சி போட்டிகள்
யூஏஇ புறப்படுவதற்கு முன்பு சென்னை சிதம்பரம் மைதானத்தில் அணி வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி போட்டிகளே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. தோனியின் தவறான முடிவால் சிஎஸ்கே அணி பயிற்சி போட்டிகளில் பின்தங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆயினும் அணியின் மற்ற வீரர்களுக்கு எடுக்கப்பட்ட தொடர் கொரோனா பரிசோதனைகளில் அவர்களுக்கு நெகட்டிவ் வந்ததையடுத்து பயிற்சி போட்டிகள் துவங்கின.
மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டி
மற்ற அணிகளை விட தாமதமாக பயிற்சி போட்டிகள் துவங்கியதையடுத்து, இரவு பகல் பாராமல் அணி வீரர்கள் தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தாமதமான பயிற்சியை மேற்கொண்டாலும், வரும் 19ம் தேதி முதல் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே எதிர்கொள்ளவுள்ளது. இதற்கென தோனி அணி வீரர்களை தயார் படுத்தி வருகிறார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சிஎஸ்கே அணி இதுவரை 3 ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ள நிலையில், இந்த முறை 4வது டைட்டிலை வெற்றி கொள்ளுமா என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த மாதம் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில் எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் அவர் இந்த ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள முடியும் என்பதால் கோப்பையை அவர் எளிதாக வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பாக விளையாட வாய்ப்பு
முன்னதாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நெருக்கடி தோனிக்கு இருந்தது. இதற்கும் தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி மற்றும் தன்னுடைய அணி வீரர்களை சிறப்பாக வழிநடத்தி போட்டிகளை தற்போது எதிர்கொள்ள முடியும்.
உற்சாகமான தோனி
மேலும் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி போட்டிகளிலும் சரி, துபாயில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளிலும் சரி, தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஒரு வருடமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாதது அவரது பயிற்சிகளில் வெளிப்படவில்லை. உற்சாகமான பழைய தோனியை பயிற்சிகளில் காண முடிந்தது.
குறைவான பயிற்சிகள்
ஆயினும் அணியின் முக்கிய வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக குறைவான பயிற்சியும் பின்னடைவாக உள்ளது. மேலும் அணியில் மூத்த வீரர்கள் அதிகமாக உள்ளனர். இதையெல்லாம் எதிர்கொண்டு தோனி, அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.