ஐபிஎல்
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால் சோகத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளார். இதற்கு காரணம் சிஎஸ்கே அணியினர், ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ளனர். தோனி, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, ருத்ராஜ் கெயிக்வாட், தீபக் சஹார் உள்ளிட்ட பல வீரர்கள் இன்று மதியம் துபாய் சென்றடைந்தனர். இதுகுறித்து புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவின் பெயர் படு மோசமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் கடந்தாண்டு நடந்த நிகழ்வு தான்.
கடந்தாண்டு
கடந்தாண்டு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்ற போது சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் துபாய் சென்று அங்கு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது திடீரென சுரேஷ் ரெய்னா ஒரு போட்டியில் கூட விளையாடாமல் திடீரென தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். இதற்கு முதலில், ரெய்னா பால்கனியுடன் கூடிய அறை கேட்டதாகவும், அது கிடைக்காததால் அணி நிர்வாகத்துடன் பிரச்னை ஏற்பட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டது. பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதாக கூறப்பட்டது.
இணையத்தில் ட்ரோல்
இந்நிலையில் இந்தாண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறுவதால், நெட்டிசன்கள் மீண்டும் ரெய்னாவின் பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். அதற்கேற்றார் போல சுரேஷ் ரெய்னாவும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பால்கனி அருகே நின்றுக்கொண்டு எடுத்த புகைப்படத்தை ஸ்டோரியாக போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில், ரெய்னாவுக்கு பால்கனியுடன் கூடிய அறை ஒருவழியாக கிடைத்துவிட்டது. இனி போகும் இடங்களிலும் பால்கனி அறையை புக் செய்யுங்கள் என ட்விட்டரில் மீம்களை போட்டு தள்ளுகின்றனர்.
ரெய்னா வருகை
சுரேஷ் ரெய்னா கடந்தாண்டு அணியில் இல்லாததே சிஎஸ்கேவின் சொதப்பலுக்கு காரணமாக பார்க்கப்பட்டது. அதே போல அவர் இந்தாண்டு சிஎஸ்கேவில் இணைந்திருப்பது, அணிக்கு பலம் சேர்ந்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள ரெய்னா 123 ரன்களை விளாசியுள்ளார்.