மும்பை இந்தியன்ஸ் வெற்றி
ஐபிஎல் 2020 தொடர் யூஏஇயில் கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் 10ம் தேதி வரையில் நடைபெற்று முடிந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாமல் இருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் 2020 சிறப்பான தருணங்களை தந்தது. இந்த தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி 5வது முறையாக வெற்றி கொண்டது.
7வது இடத்தில் வெளியேற்றம்
இந்நிலையில், ப்ளே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெற முடியாமல் கடந்த தொடரில் திணறியது சிஎஸ்கே அணி. 7வது இடத்தில் இருந்த அந்த அணி, ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பழைய வீரர்களை கொண்டே ஒப்பேற்றி வந்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த சீசனில் புதிய முகங்களை களமிறக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.
சிஎஸ்கே திட்டம்
கடந்த தொடரில் சொதப்பிய பியூஷ் சாவ்லா, முரளி விஜய் ஆகியோரை விடுவிக்க அந்த அணி தற்போது திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் மாதம் 11ம் தேதி ஐபிஎல் ஏலம் 2021 சிறிய அளவில் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முன்னதாக தங்களது அணியில் தக்க வைக்கப்படவுள்ள வீரர்களை இறுதி செய்ய கடந்த மாதம் 20ம் தேதி வரையில் கெடு விதிக்கப்பட்டிருந்தது.
சிஎஸ்கே வியூகம்
வரும் மாதம் நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்க சிஎஸ்கே கைகளில் 15 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது. இந்நிலையில் பியூஷ் சாவ்லாவை விடுவித்தால் அவருக்கான 6.75 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்பதால் இந்த முடிவை சிஎஸ்கே எடுக்கவுள்ளது.
தோனி கைகளில் முடிவு
இந்நிலையில் கடந்த தொடரின் துவக்கத்திலேயே சிஎஸ்கேவிலிருந்து வெளியேறிய சுரேஷ் ரெய்னா மற்றும் போட்டிகளில் சொதப்பிய கேதார் ஜாதவ் ஆகியோரை அணியில் தொடர்ந்து தக்க வைப்பது குறித்த முடிவுகளை அணி கேப்டன் எம்எஸ் தோனி எடுப்பார் என்று அணி சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முறை புதிய முகங்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கவும் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.