ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே
ஐபிஎல்லின் 37வது போட்டி அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் இன்று மாலை சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.
தோனியின் 200வது போட்டி
இது ஒருபுறமிருக்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே கேப்டன் தோனியின் சாதனை பயணங்கள் மட்டும் நின்றபாடில்லை. இந்நிலையில் இன்றைய போட்டியில் அவரது மகுடத்தில் மேலும் ஒரு சாதனை அரங்கேற உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதன்மூலம் 200வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமை தோனிக்கு கிடைக்கவுள்ளது.
4000 ஐபிஎல் ரன்கள் சாதனை
இதேபோல 150 கேட்ச்களை பிடித்த சாதனையை படைக்க ஒரு கேட்சும் 4000 ஐபிஎல் ரன்களை பூர்த்தி செய்ய 6 ரன்களும் தோனிக்கு மீதம் உள்ளது. இதையும் இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காத்திருக்கும் டூ பிளசிஸ்
இதனிடையே, இன்றைய போட்டியில் 2 கேட்ச்களை பிடித்தால் சிஎஸ்கேவின் பாப் டூ பிளசிஸ் 50 ஐபிஎல் கேட்ச்களை பூர்த்தி செய்த சாதனையை செய்வார். இதேபோல ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு 100 பவுண்டரிகள் மற்றும் 1000 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 3 பவுண்டரிகளும் 21 ரன்களும் தேவைப்படுகிறது. ஜோஸ் பட்லருக்கு 50 ஐபிஎல் சிக்ஸ்களை பூர்த்தி செய்ய 4 சிக்ஸ்கள் மட்டுமே தேவையாக உள்ளது.