சென்னை அணி
இந்த ஆண்டு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 8இல் வென்று, 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. லீக் சுற்றில் இன்னும் 4 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களில் தேர்வாகும் அணிக்கு பைனல் செல்ல 2 வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சிஎஸ்கே இப்போது அதை நோக்கியே ஆடி வருகிறது.
சிஎஸ்கே வெற்றி
சிஎஸ்கே அணி கடைசியாக நேற்று அபுதாபியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா திரிபாதி மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 171 ரன்களை எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. இருப்பினும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, ஆட்டம் கடைசி பந்து வரை சென்றது. இறுதியில் சென்னை அணி 2 விக்கெட் அட்டகாசமாக வென்றது.
டூப்ளசிஸ்
இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் டூப்ளசிஸும் ஒரு முக்கிய காரணம். நேற்றைய போட்டியில் டூப்ளசிஸ் 30 பந்துகளில் 7 பவுன்டரிகளுடன் 43 ரன்களை எடுத்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்த ஆரஞ்சு கேப் வரிசையில் 362 ரன்களுடன் 3ஆவது இடத்தில் டூப்ளசிஸ் உள்ளார். அட்டகாசமான ஃபார்மில் உள்ள டூப்ளசிஸ் தொடர்ந்து சூப்பரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழலில் சுமார் 4 மாதங்களுக்கு முன் அதே மைதானத்தில் தலையில் ஏற்பட்ட காயத்தால் கன்கஷன் ஏற்பட்டது குறித்து முக்கிய தகவலை டூப்ளசிஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.
துரத்தும் அந்த ஒற்றை காயம்
இது குறித்து டூப்ளசிஸ் கூறுகையில், "நான் மைதானத்திற்குள் நுழைந்த போது, எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது எனது கன்கஷன் காயம் குறித்துத் தான். நான் கடைசியாக இங்கு வந்தபோது எனக்கு கன்கஷன் ஏற்பட்டது. இதனால் களத்தில் நுழைந்தது முதல் எனக்கு அந்த நினைவு தான் இருந்தது. ஆனாலும், என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கன்கஷன் பாதிப்பு காரணமாக நீண்ட காலம் நான் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இப்போதும் கூட அந்த சம்பவத்தால் ஏற்பட்ட கழுத்து வலி இன்னும் எனக்கு இருக்கிறது. ஆனால், போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று கூறும் அளவுக்கு மோசமான வலி இல்லை. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே தோனி எனது உடல்நிலை குறித்து விசாரித்தார்" என்று அவர் தெரிவித்தார்.
Recommended Video
என்ன நடந்தது
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பாதிப்பு காரணமாக மே மாதம் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டது. அந்த சமயத்தில் டூப்ளசிஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஜூன் மாதம் அபுதாபியில் பெஷாவர் சல்மி அணிக்கு எதிரான போட்டியில் சக வீரரான முகமது ஹஸ்னைனுடன் மோதியதில் டூப்ளசிஸுக்கு கன்கஷன் ஏற்பட்டது. இதையடுத்து பல மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
பேரிழப்பு
ஐபிஎல் போட்டிகளிலும் டூப்ளசிஸ் கலந்து கொள்வது கடினம் என்றே முதலில் கூறப்பட்டது. இருப்பினும், ஐபிஎல் தொடங்கும் முன்னரே தேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டூப்ளசிஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தால், நிச்சயம் அது சென்னை அணிக்குப் பேரிழப்பாகவே முடிந்திருக்கும். சென்னை அணி தனது அடுத்த போட்டியில் வரும் வியாழக்கிழமை ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.