முதல் போட்டியில் தோல்வி
ஐபிஎல் 2021 தொடரை முன்னிட்டு சிறப்பாக தயாரானது சிஎஸ்கே. சென்னை அதை தொடர்ந்து மும்பை என பயிற்சிகளை முடுக்கி விட்டது. ஆயினும் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதிய சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தொடர் ஆதரவு
ஆயினும் அந்த அணியை ரசிகர்கள் ஏமாற்றவில்லை. தொடர்ந்து அந்த அணிக்கு அவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அதன் கடினமான நேரங்களில் அதற்கு கைகொடுத்து வருகின்றனர். சிஎஸ்கேவின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
வெற்றி கணக்கை துவக்குமா?
இந்நிலையில் நாளைய தினம் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சிஎஸ்கே மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் வெற்றியுடன் தனது ஐபிஎல் தொடரை துவங்கியுள்ள நிலையில் அந்த அணியை எதிர்த்து நாளை சிஎஸ்கே மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை சிஎஸ்கே துவங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
7 மில்லியன் பின்தொடர்பவர்கள்
இந்நிலையில் இதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தன்னுடைய அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட சிஎஸ்கேவிற்கு அருமையான காரணம் அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் சிறப்பாக செயல்பட்டுவரும் சிஎஸ்கேவை பின்தொடர்பவர்கள் 7 மில்லியனாக உயர்ந்துள்ளனர். இந்த சாதனையை செய்துள்ள முதல் ஐபிஎல் அணி சிஎஸ்கே. இரண்டாவது இடத்தில் 6.9 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.
தோனியை கொண்டாடும் ரசிகர்கள்
இதையடுத்து அணியின் கேப்டன் தோனியின் புகைப்படத்துடன் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளது. கடந்த சீசனில் ப்ளே-ஆப் சுற்றிற்குகூட முன்னேறாத அந்த அணிக்கு தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு இருப்பதை இந்த செயல் நிரூபித்துள்ளது. முக்கியமாக தோனியை ரசிகர்கள் தொடந்து கொண்டாடி வருகின்றனர்.