சிஎஸ்கே அபார வெற்றி
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதனால் தோனியையும், சென்னை அணியையும் இனி அவ்வளவு தான் என விமர்சனங்கள் குவிந்தன. ஆனால் பேசிய அத்தனை வாய்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தாண்டு முதல் அணியாக ப்ளே ஆஃப் சென்று இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சென்னை அணி வீரர்கள் அனைவரும் தோனியை நினைத்து ஆனந்தத்தில் கண்கலங்கினர்.
வெற்றி விழா
சென்னை அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஓவ்வொரு முறையும் பெரிய அளவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும். அந்தவகையில் இந்தாண்டும் சிஎஸ்கே அணியின் வெற்றியை சென்னையில் மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர். அதற்கு சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்நிலையில் அது எப்போது, எங்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இல்லை
சென்னை அணி வீரர்கள் அனைவரும் இந்தியா திரும்பினாலும், அந்த அணியின் தூணாக பார்க்கப்படும் எம்.எஸ். தோனி, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார். எனவே அவர் அமீரகத்திலேயே தொடர்ந்து தங்கவுள்ளார். அவரின்றி வெற்றி விழா நடைபெறுவதில் விருப்பம் இல்லை என்றும் அவர் இந்தியா திரும்பியவுடன் கொண்டாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோனியின் அனுபவம்
கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அவரின் ஆலோசனைகள் இருந்தால் இந்தாண்டு நிச்சயம் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும் என்பதால் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சிஎஸ்கேவுக்கு கோப்பை வென்றுக்கொடுத்த நம்பிக்கையிலும் தோனி இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாகவுள்ளது.