சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த காசி விஸ்வநாதன் உள்ளிட்ட 3 பேர் இணைந்து உருவாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனம், வாங்கியுள்ளதாக கம்பெனி விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் பி.சி.சி.ஐ அமைப்பிலும் பதவியில் இருந்தால், ஆர்வம் பிளவுபடும் என்பதால், இரு பதவிகளை தவிர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பி.சி.சி.ஐ தலைவராக இருந்த ஸ்ரீநிவாசன் தனக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கை மாற்றப்பட்டது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, தற்போது நிர்வகித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் பட்டியல் கம்பெனி விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த காசி விஸ்வநாதன் சுப்பிரமணியன் இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த காசி விஸ்வநான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய செயலாளர் ஆவார். தமிழ்நாடு கிரிக்கெட் சஙகத்தின் தலைவராக இருப்பவர் ஸ்ரீனிவாசன். தற்போதையை பி.சி.சி.ஐ தலைவரான ஸ்ரீனிவாசனும், காசி விஸ்வநாதனும் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். எனவே நண்பரிடமே அணியை கைமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த சபரீசன் லட்சுமணன், டி. நகரை சேர்ந்த கல்யாண சுந்தரம் பாலசுப்ரமணியம் ஆகியோரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிற இயக்குநர்கள் என அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.