முக்கியமான இன்றைய போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஐபிஎல்லின் 7வது போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் விளையாடி ஒரு போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
தோல்வியடைந்த சிஎஸ்கே
சிஎஸ்கே முதல் போட்டியில் வெற்றிபெற்றவுடன் அதன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டு அடுத்த போட்டியை பார்த்த நிலையில் 216 ரன்களை அள்ளிக் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் அந்த அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. தோனி 7வது வீரராக களமிறங்கியதும் விமர்சனத்திற்குள்ளாகியது.
வெற்றியின் தேவை
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான இன்றைய போட்டியில் சிஎஸ்கே தனது பௌலிங் ஆர்டரை சிறப்பாக அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே அந்த அணியின் ரன்னை குறைத்து, விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுக்க வேண்டிய தேவை சிஎஸ்கேவிற்கு உள்ளது. இவ்வாறு செயல்பட்டால் மட்டுமே வெற்றியை அந்த அணி பெற முடியும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
சிறப்பான துவக்க பேட்டிங் ஆர்டர்
டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க பேட்டிங் ஆர்டரில் பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷிம்ரன் ஹெட்மயர், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னஸ் ஆகிய ஆறு வீரர்கள் உள்ளனர். கடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் இவர்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது.
நிகிடி குறித்து பிளமிங் கருத்து
கடந்த போட்டியில் லுங்கி நிகிடி இறுதி ஓவரில் 30 ரன்களை அள்ளிக் கொடுத்த நிலையில், அவர் இன்றைய போட்டியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொள்வார் என்று பிளமிங் தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சியின்போது பிராவோ, நிகிடிக்கு அதிகமான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும், அதுவும் இன்றைய போட்டியில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
சிஎஸ்கேவின் அம்பத்தி ராயுடு மற்றும் டிவைன் பிராவோ ஆகியோர் காயங்களால் போட்டிகளில் இடம்பெறாத நிலையில், தோனியின் பேட்டிங் மீது ரசிகர்களின் பார்வை விழுந்துள்ளது. கடந்த போட்டியை போல இல்லாமல் அவர் முன்னதாகவே களமிறங்கி விளையாட வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.