ஐபிஎல் இறுதிப்போட்டி
இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏக போகத்திற்கு எகிறியுள்ளது. தற்போது இரு அணிகளும் உள்ள ஃபார்மை வைத்து முன்னாள் வீரர்களும், வல்லுநர்களும் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் பதிவிட்ட புகைப்படம் தான் இணையத்தில் பேசுப் பொருளாகியுள்ளது.
மோசமான சீசன்
இந்தாண்டு ஐபிஎல் தொடர் டேவிட் வார்னருக்கு மறக்க முடியாத மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து முதலில் வார்னர் நீக்கப்பட்டார். பின்னர் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்ட வார்னர், இறுதியில் அணியின் டக் அவுட்டில் கூட உட்காரவிடாமல் ரசிகர்கள் அமரும் இடத்தில் இருந்து தனது அணியை உற்சாகப்படுத்தி வந்த வீடியோ ரசிகர்களுக்கு வேதனை தந்தது.
டேவிட் வார்னர் பதிவு
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள சிஎஸ்கே vs கொல்கத்தா அணிகளின் போட்டி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் டேவிட் வார்னர் சிஎஸ்கே அணியின் ஆதரவாளரை போன்று மஞ்சள் நிற ஜெர்ஸியில் உள்ளார். மேலும் தனது மகளையும் சிஎஸ்கே ஜெர்ஸியில் இருப்பது போன்று தோளில் தூக்கி நின்றுள்ளார்.
புகைப்படம் நீக்கம்
புகைப்படத்திற்கு கீழே, இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இதனை எனது ரசிகர் ஒருவர் பதிவிடுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். அவருக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே நான் பதிவிட்டேன் எனக்குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்த புகைப்படம் வெளியாகி வைரலானதை அடுத்து கேகேஆர் ரசிகர்கள் கோபமடைந்தனர். எனவே நமக்கு எதற்கு வம்பு என்பது போல அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்கிவிட்டு ஐதராபாத் அணி ஜெர்ஸி அணிந்திருப்பது போன்று வெளியிட்டார்.