இறுதிப்போட்டி
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. அதாவது கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியிலாவது நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா களமிறங்குவாரா என்பதில் அணிக்குள் தீவிர ஆலோசனைக் கூட்டம் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் நாளை நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்று விளையாடுவாரா என்பதில் இருந்துதான், அடுத்தாண்டு அவர் தக்கவைக்கப்படுவாரா என்பது தெரியவரும்.
ரெய்னா தொடர் சொதப்பல்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார். ரெய்னா இருந்தால் சிஎஸ்கேவின் பலம் கூடும் என கூறப்பட்டது. இந்தாண்டு இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 160 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதனால் லீக் போட்டிகளின் போதே ரெய்னா பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக ராபின் உத்தப்பா கொண்டு வரப்பட்டார்.
வாய்ப்பை பயன்படுத்திய உத்தப்பா
லீக் தொடரில் புறக்கப்பட்ட ரெய்னா, ப்ளே ஆஃப் சுற்றில் ஆவது வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ராபின் உத்தப்பா தனது வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார். முதல் ப்ளே ஆஃப் போட்டியில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற ராபின் உத்தப்பா அடித்த அரைசதம் தான் மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
விவாதம்
இந்நிலையில் இறுதிப்போட்டியிலாவது ரெய்னா விளையாடுவது குறித்த விவாதத்தில் பயிற்சியாளர்கள் மற்றும் தோனி ஈடுபட்டுள்ளனர். இதில் உத்தப்பாவுக்கு மாற்றாக நிச்சயம் ரெய்னா கொண்டு வரப்படமாட்டார் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் மொயீன் அலிக்கு மாற்றாக ரெய்னா வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தாண்டின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய மொயீன் அலி, தற்போது சொதப்பி வருகிறார். எனவே அவரை நீக்கிவிட்டு, ரெய்னாவை கொண்டு வந்தால் முதல் விக்கெட்டிற்கு நன்கு ரன் குவிப்பார் என்று திட்டமிடப்பட்டு வருகிறது. ஒருவேளை மொயீன் அலி நீக்கப்படாவிட்டால், நிச்சயம் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்காது.