சென்னை பேட்டிங்
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது சென்னை. துவக்க வீரர்களாக இந்த ஷேன் வாட்சன், பாப் டு ப்லெசிஸ் களம் இறங்கினர். வாட்சன் 26 ரன்கள் அடித்து வெளியேறினார். சுரேஷ் ரெய்னா 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
டு ப்லெசிஸ் அரைசதம்
டு ப்லெசிஸ் அரைசதம் கடந்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 4வது இடத்தில் களமிறங்கிய தோனி, 5வது இடத்தில் களமிறங்கிய அம்பதி ராயுடு கடைசி 3 ஓவர்களில் விரைவாக ரன் சேர்த்தனர். தோனி 37, அம்பதி ராயுடு 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அஸ்வின் அசத்தல்
சென்னை அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் இழந்து இருந்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின், முருகன் அஸ்வின் இருவரும் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தனர்.
துவக்கமே அதிர்ச்சி
அடுத்து பஞ்சாப் அணி 161 ரன்கள் என்ற எட்டக் கூடிய இலக்கை நோக்கி ஆடியது. இந்த அணிக்கு துவக்கமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. கிறிஸ் கெயில் 5, மாயங்க் அகர்வால் 0 ரன்களுக்கு 2வது ஓவரிலேயே வெளியேறினர். ஹர்பஜன் இரண்டு விக்கெட்களையும் ஒரே ஓவரில் வீழ்த்தி பஞ்சாப் அணியை மிரள வைத்தார்.
தடுப்பாட்டம் ஆடிய கூட்டணி
எனினும், மற்றொரு துவக்க வீரர் ராகுல், சர்ப்ராஸ் கான் இணைந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டு ஆடினர். இவர்களது திட்டம் சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் தடுப்பாட்டம் ஆடுவது, வேகப் பந்துவீச்சாளர்கள் ஓவரில் அதிரடி காட்டுவது என்பதாக இருந்தது.
நிதான ஆட்டம்
சென்னை அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். தோனி திட்டமிட்டு அவர்களை தொடர்ந்து பயன்படுத்தினார். 13வது ஓவர் வரை தேவைப்படும் ரன் ரேட் ஓவருக்கு 9 என்ற நிலையில் இருந்தது. ஆனால், அதன் பின்னும் சுழற் பந்துவீச்சாளர்கள் ஓவர்கள் தொடர்ந்து வீசப்பட்டு வந்ததால், ராகுல் - சர்ப்ராஸ் நிதானம் காட்டினர். இடையே இருவரும் அரைசதம் கடந்தனர்.
ரன் ரேட் எகிறியது
இதனால், தேவைப்படும் ரன் ரேட் எகிறி 17வது ஓவரில் 15-ஐ தொட்டது. அதன் பின் 18வது ஓவரில் குஜ்ஜெலேஜின் ஓவரில் அதிரடி காட்ட முயன்ற ராகுல் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 19வது ஓவரில் சாஹர் 2 நோ பால் போட்டு பதற்றத்தை அதிகரித்தார். இந்த ஓவரில் டேவிட் மில்லர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில்..
கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பஞ்சாப் அணியால் அதிரடியாக ரன் எடுக்க முடியவில்லை. இந்த ஓவரில் சர்ப்ராஸ் கான் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 20வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப். தோனியின் சிறப்பான பந்துவீச்சு திட்டத்தால் சென்னை தோற்க வேண்டிய போட்டியிலும் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணியை தோற்கடித்தனர்
பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் ராகுல் - சர்ப்ராஸ் கான் மிக மிகத் தவறான திட்டத்தால் அடித்து ஆட வேண்டிய நேரத்தில் அமைதி காத்து விட்டு, கடைசி நேர அழுத்தத்தில், ரன் குவிக்க முடியமால் பஞ்சாப் அணியை தோற்கடித்தனர். அரைசதம் அடித்து, விக்கெட் விழாமல் பேட்டிங் செய்தே தங்கள் அணியை தோற்கடித்தனர் ராகுல் - சர்ப்ராஸ் கான்.