தோனி - ரெய்னா நட்பு
தோனி ரெய்னா நட்பு 2005இல் இருந்தே தொடர்ந்து வரும் ஒன்று. இருவரும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இந்திய அணியில் ஒன்றாகவே சேர்ந்து ஆடத் துவங்கினர். தோனி கேப்டன் ஆன போது சுரேஷ் ரெய்னா அணியின் முக்கிய அதிரடி பேட்ஸ்மேன் ஆக வலம் வந்தார்.
ஓய்வு அறிவிப்பு
அவர்கள் நட்பு கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஒன்றாக ஓய்வு அறிவிப்பது வரை தொடர்ந்தது. அதன் பின் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்க, பயிற்சி செய்ய துபாய்க்கு சென்றது. அது வரை தோனி - சுரேஷ் ரெய்னா இடையே எந்த பிரச்சனையும் இல்லை.
ரெய்னா திடீர் விலகல்
துபாயில் முதல் வாரம் குவாரன்டைன் முடிவில் திடீரென சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக அறிவித்தது சிஎஸ்கே அணி. ரெய்னா ஏன் விலகினார்? என்பது பெரிய மர்மமாக இருந்தது.
வதந்திகள்
அவரது உறவினர் குடும்பத்தில் சிலர் கொள்ளையர்கள் தாக்குதலில் மரணம் அடைந்ததால் இந்தியா திரும்பினார் என்றும், சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்ததால் சென்றார் என்றும், ஹோட்டல் அறையை மாற்றிக் கேட்டதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்றார் என்றும் பல்வேறு வதந்திகள் வலம் வந்தன.
சீனிவாசன் விளாசல்
சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பிய உடன் அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவரை கடுமையாக விளாசினார். அவர் எத்தனை பணத்தை இழந்துள்ளார் என்பது அவருக்கு விரைவில் புரியும் என சற்று அதிக கோபத்தை வெளிப்படுத்தினார்.
தோனிக்கு ரெய்னா மெசேஜ்
பின்னர் சீனிவாசன் - ரெய்னா சமாதானம் ஆனது போல மாற்றி, மாற்றி பேட்டிகள் கொடுத்து அப்பா - மகன் பாசத்தை பொழிந்தனர். ரெய்னா விரைவில் சிஎஸ்கே அணிக்கு திரும்பி விடுவார் என்றனர். ஆனாலும், அப்படி எதுவும் நடக்கக்வில்லை. ரெய்னா, கேப்டன் தோனிக்கு மெசேஜ் போட்டு விட்டு காத்திருந்தார்.
தோனி முடிவு என்ன?
சுரேஷ் ரெய்னாவின் மெசேஜுக்கு தோனி பதில் அனுப்பினாரா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், சுரேஷ் ரெய்னா வேண்டாம் என்ற முடிவில் தோனி விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், ரெய்னா - தோனி இடையே நடந்த ஒரு சம்பவம் தான் என்றும், அதனால் தான் ரெய்னா இந்தியா திரும்பினார் என்றும் கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
சுரேஷ் ரெய்னா துபாயில் முதல் வார குவாரன்டைனில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாகவும், அதைப் பற்றி விசாரித்த போது தோனி - ரெய்னா இடையே பெரிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்தே ரெய்னாவை இந்தியா அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
தோனி உறுதி
அந்த சம்பவத்தால் தான் தோனி, சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைய விரும்பினாலும் வேண்டவே வேண்டாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ரெய்னாவுக்கு பதில் மாற்று வீரரையும் தோனி தேர்வு செய்யவில்லை.
சிக்கலில் சிஎஸ்கே
சுரேஷ் ரெய்னாவும் இல்லாமல், மாற்று வீரரும் இல்லாமல் சிஎஸ்கே அணி பாதி தொடரில் சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணியில் சில வீரர்கள் காயம் அடைந்தால், மாற்று வீரர்கள் இல்லாத நிலை ஏற்படும். எனினும், தோனி ரெய்னாவும் வேண்டாம், அவருக்கு மாற்று வீரரும் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.