ஏலத்தில் சிஎஸ்கே அணி
2020 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி பியுஷ் சாவ்லாவை வாங்கியது. அப்போது அனைவருக்கும் எழுந்த முதல் கேள்வி சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஐந்து சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதில் நால்வர் சர்வதேச போட்டிகளில் அதிக ஓவர்கள் பந்து வீசிய அனுபவம் கொண்டவர்கள்.
அதிக விலை
இந்த நிலையில், 6.75 கோடி கொடுத்து போட்டி போட்டு பியுஷ் சாவ்லாவை ஏன் வாங்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது. அப்போது சிஎஸ்கே அணி நிர்வாகம், கேப்டன் தோனி சொன்னதால் அவரை எந்த விலை கொடுத்ததும் வாங்க முடிவு எடுத்து வாங்கியதாக கூறியது.
ஹர்பஜன் சிங் விலகல்
அடுத்து 2020 ஐபிஎல் தொடர் நடக்க இருந்த சில நாட்கள் முன் சிஎஸ்கே அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் திடீரென 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணியில் பெரிய இடைவெளி ஏற்பட்டது.
தோனி உறுதி
ஹர்பஜன் சிங் விலகியதால் அவருக்கு பதில் மாற்று வீரரை சிஎஸ்கே அணி தேர்வு செய்யலாம். ஆனால், அந்த அணி யாரையும் தேர்வு செய்யவில்லை, கேப்டன் தோனி அணியில் இருக்கும் வீரர்களே போதும் என உறுதியாக இருந்து விட்டார்.
முதல் போட்டி
இந்த நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது சிஎஸ்கே அணி. அந்த அணியின் பியுஷ் சாவ்லா இடம் பெற்றார். மும்பை அணி துவக்கத்தில் அதிரடியாக ரன் சேர்த்து வந்த போது 5வது ஓவரை பியுஷ் சாவ்லா வசம் அளித்தார் தோனி.
பியுஷ் சாவ்லா அசத்தல்
ஆபத்தான ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்து மிரட்டினார் பியுஷ் சாவ்லா. அவர் வீசிய 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் குறைந்த ரன்கள் கொடுத்ததால் மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவர்களில் அடிக்க முற்பட்டு விக்கெட்களை இழந்தது மும்பை இந்தியன்ஸ்.
குறைந்த ரன்கள்
டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் குறைவான ரன்கள் கொடுப்பது தான் முக்கியம். அப்படி செய்தாலே விக்கெட்கள் விரைவாக கிடைக்கும். அந்த பணியை கடந்த சீசன்களில் ஹர்பஜன் சிங் செய்து வந்தார். அதை அப்படியே பியுஷ் சாவ்லாவும் செய்து ஹர்பஜன் சிங் இல்லாத குறையை போக்கி உள்ளார்.
நிரூபித்த சாவ்லா
தன்னை 6.75 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது சரியான முடிவு தான் என் தான் ஆடிய முதல் போட்டியிலேயே நிரூபித்துள்ளார் பியுஷ் சாவ்லா. இனி அடுத்து வரும் போட்டிகளிலும் சிஎஸ்கே அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளர் அவர் தான் என்பதில் சந்தேகமே இல்லை.
பிராவோ இல்லை
சிஎஸ்கே அணியில் முக்கிய ஆல் ரவுண்டர் பிராவோ ஆடவில்லை. இரண்டாவது போட்டியிலும் அவர் ஆட மாட்டார் என சிஎஸ்கே அணி தகவல் கூறி உள்ளது. அவருக்கு காலில் காயம் உள்ளதாகவும், அது முழுமையான குணமான பின் அவர் அணியில் தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.