ரெய்னா விலகல்
சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. திடீரென துபாயில் இருந்து அவர் இந்தியா கிளம்பிச் சென்றார். சிஎஸ்கே அணி அதனால் பெரிய இழப்பை சந்தித்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
தோனி எடுத்த முடிவு
ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப விரும்பினாலும் கேப்டன் தோனி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ரெய்னாவுக்கு மாற்று வீரரையும் அவர் தேர்வு செய்யவில்லை. அணியில் இருக்கின்ற வீரர்களை வைத்தே சமாளிக்க அவர் முடிவு செய்தார்.
முரளி விஜய்க்கு வாய்ப்பு?
முக்கியமாக கடந்த இரண்டு சீசன்களில் அதிக போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறாத முரளி விஜய்க்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படும். அவர் சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்றாக சிஎஸ்கே அணியில் போட்டிகளில் இடம் பெறுவார் என கூறப்பட்டது.
துவக்க வீரர் யார்?
ஆனால், சிஎஸ்கே அணியின் உத்தேச அணிகளை வகுக்கும் அனைத்து விமர்சகர்களும் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்காது என்றே கூறி உள்ளனர். ஷேன் வாட்சனுடன் துவக்க வீரராக, பாப் டுபிளெசிஸ் களமிறங்கவே அதிக வாய்ப்பு என அவர்கள் கூறி வருகின்றனர்.
சிஎஸ்கே வழக்கம்
அதற்கு முக்கிய காரணம், சிஎஸ்கே அணி எப்போதுமே இதற்கு முன் ஆடிய அதே அணியைத் தான் தேர்வு செய்யும். கடந்த சீசனில் அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய அதன்படி ஷேன் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் மீண்டும் துவக்க வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.
அம்பதி ராயுடு
சுரேஷ் ரெய்னாவின் மூன்றாம் வரிசையில் அம்பதி ராயுடு களமிறங்குவார். அவர் கடந்த சீசனில் அதிக போட்டிகளில் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து இடம் பெற்றவர் என்பதே அதற்கு முக்கிய காரணம். நான்காம் வரிசையில் ஆடிய அவர் தற்போது மூன்றாம் வரிசையில் ஆடுவார்.
பாப் டுபிளெசிஸ்
முரளி விஜய்க்கு அப்போது போட்டிகளே கிடைக்காதா? சில போட்டிகளில் மட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். பாப் டுபிளெசிஸ் வெளிநாட்டு வீரர் என்பதால் நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற சிக்கலில், அவரை சில போட்டிகளில் தோனி வெளியே அமர வைப்பார்.
தோனி என்ன செய்வார்?
அப்போது மட்டுமே முரளி விஜய்க்கு துவக்க வீரராக போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கும். தோனி பந்துவீச்சாளர்களை தவிர கடந்த சீசனில் அதிக போட்டிகளில் ஆடிய அதே வீரர்களுக்கே வாய்ப்பு வழங்குவார் என சிஎஸ்கேவை பற்றி நன்கு அறிந்த விமர்சகர்கள் கூறுகின்றனர்.