துபாய்: காயம் காரணமாக டு பிளசிஸ் மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், சிஎஸ்கே வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது.
கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர், அமீரகத்தில் நாளை (செப்.19) முதல் மீண்டும் தொடங்குகிறது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
சென்னை அணியில் காயம் காரணமாக டு பிளசிஸ் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. அதேபோல், குவாரண்டைனில் இருக்கும் சாம் கர்ரனும் இப்போட்டியில் விளையாட மாட்டார். எனவே சிஎஸ்கே-வில் ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (c & wk), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி ங்கிடி, ஜே ஹேசில்வுட் ஆகியோர் இடம் பிடிக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் ஷர்மா (c), குயின்டன் டி காக் (wk), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல்/ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. எட்டு அணிகளில் அதிக ரன் ரேட் வைத்திருக்கும் அணி சென்னை தான். இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிடலாம். இந்த சூழலில் தான் இந்த இரண்டாம் பகுதியில் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது சென்னை. ஆனால், சென்னை அணி இப்போது சந்திக்கவுள்ள மிக முக்கிய பிரச்சனை டு பிளசிஸ் காயம் தான். கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய டு பிளசிஸ் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் 64.00 ஆவரேஜுடன் 320 ரன்களை குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 145.45. இதில், நான்கு அரைசதங்கள் அடங்கும். அப்படிப்பட்ட மிரட்டலான ஃபார்மில் இருக்கும் டு பிளசிஸ் காயம் சென்னை அணிக்கு நிச்சயம் சிக்கலே.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், "கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பிறகு பாப் டு பிளசிஸ், அணியுடன் இணைந்து பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். நாளைய போட்டியை முன்னிட்டு, அவரது உடற்தகுதி குறித்த இறுதி முடிவு போட்டி தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். அவர் சொன்னதுக்கு ஏற்றார் போல், சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில், இன்று அவர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், எந்தவித சுணக்கமும் இன்றி, அவர் பேடை கட்டி பயிற்சிக்கு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Colour Code - FDP💛 . Have you got your #Yellove paint yet?#WhistlePodu 🦁 @faf1307 @imShard pic.twitter.com/5TIEC0V66c
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 18, 2021
எனினும், ஒருவேளை டு பிளசிஸ் விளையாட முடியவில்லை என்றாலும் ரிசர்வ் வீரராக ராபின் உத்தப்பா தயாராக இருக்கிறார் என்றும் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். என்ன இருந்தாலும், டு பிளசிஸ் விளையாட முடியவில்லை எனில், அது சென்னை அணிக்கு பேரிழப்பு என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஏனெனில், அவரது அபார பேட்டிங், மிரட்டல் ஃபீல்டிங், அசத்தல் கேட்சுகள் என அனைத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் தவறவிடும். அவரது இடத்தை வேறு ஒருவர் ரீபிளேஸ் செய்வது மிகவும் கடினம்.
கிரவுண்டின் நாலா பக்கமும் விளாசிய தல.. அந்த கடைசி சிக்ஸில் பழைய பன்னீர்செல்வமாய் தோனி (வீடியோ)