அனுபவ வீரர்கள்
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் இரண்டு முக்கிய வீரர்களை இல்லாமல் பங்கேற்க உள்ளது. ஒருவர் சுரேஷ் ரெய்னா மற்றொருவர், ஹர்பஜன் சிங். இருவருமே நீண்ட, நெடிய சர்வதேச அனுபவமும், ஐபிஎல் அனுபவமும் கொண்ட வீரர்கள்.
தோனி எடுத்த முடிவு
அவர்களுக்கு மாற்று வீரர்களை சிஎஸ்கே அணி தேர்வு செய்யவில்லை. கேப்டன் தோனி மாற்று வீரர்கள் இல்லாமலேயே சமாளிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அணியில் இருக்கும் வீரர்களை வைத்தே ரெய்னா, ஹர்பஜன் சிங் இடத்தை நிரப்பலாம் என அவர் உறுதியாக இருக்கிறார்.
பியுஷ் சாவ்லா
ஹர்பஜன் சிங் இடத்தை பியுஷ் சாவ்லா நிரப்ப இருக்கிறார். அதில் எந்த குழப்பமும் இல்லை. மற்ற சுழற் பந்துவீச்சாளர்கள் கடந்த சீசனிலும் ஆடி உள்ளதால் அவர்கள் தங்கள் பணியை எந்த சந்தேகமும் இன்றி செய்வார்கள். ஆனால், ரெய்னா பேட்டிங் செய்து வந்த மூன்றாம் வரிசையில் யாரை களமிறக்குவது?
முரளி விஜய்க்கு முக்கியத்துவம்
அது தான் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் ரெய்னா விலகிய உடன் சிஎஸ்கே பயிற்சியை துவக்கிய போது முரளி விஜய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவர் அனைத்துவித பயிற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். அதை வைத்து அவர் தான் ரெய்னாவுக்கு மாற்று வீரர் என்றார்கள்.
ஏழு பேட்ஸ்மேன்கள்
ஆனால், சிஎஸ்கே உத்தேச அணியை வைத்துப் பார்த்தால் ஏழு பேட்ஸ்மேன்கள் தான் இடம் பெற முடியும். அதில் ஷேன் வாட்சன், தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ ஆகிய ஐந்து பேரின் பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் இருக்காது.
இரண்டு இடங்களில் பேட்டிங் யார்?
ஆனால், வாட்சனுடன் துவக்க வீரராக இறங்கப் போவது யார்?, ரெய்னாவின் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்யப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. முரளி விஜய், பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு ஆகிய மூவர் இந்த இரண்டு இடங்களுக்கு போட்டி போட்டு வருகின்றனர்.
மூன்று வீரர்கள்
முரளி விஜய், பாப் டுபிளெசிஸ்-யால் துவக்க வீரர்களாகவும், மூன்றாம் வரிசையிலும் பேட்டிங் செய்ய முடியும். அம்பதி ராயுடு மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய பொருத்தமாக இருப்பார். இவர்கள் மூவரின் பேட்டிங் பார்ம் தான் பெரும் சிக்கல்.
என்ன நடக்கும்?
இந்த நிலையில், முரளி விஜய் துவக்க வீரராக இறங்கினால், பாப் டுபிளெசிஸ் அல்லது அம்பதி ராயுடு அணியில் இடம் பெறுவர். அல்லது முறை விஜய்யை நீக்கி விட்டு பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு அணியில் வாய்ப்பு பெறுவர்.
வாய்ப்பை இழக்கப் போவது யார்?
கடந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் ஆடிய அம்பதி ராயுடு இந்த முறையும் அணியின் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்றே கருதப்படுகிறது. முரளி விஜய், பாப் டுபிளெசிஸ் ஆகியோரில் ஒருவர் தான் அணியில் வாய்ப்பை இழக்கப் போகிறார்கள்.
கேப்டன் தோனி
கேப்டன் தோனி கையில் தான் இறுதி முடிவு உள்ளது. பாப் டுபிளெசிஸ் வெளிநாட்டு வீரர் என்பதால் வேறு வெளிநாட்டு வீரரை அணியில் ஆட வைக்க அவர் வெளியே அமர வைக்கப்படலாம். கடந்த சீசனில் அது போன்ற சில நிகழ்வுகள் நடந்தன.