முதல் போட்டி
2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய சிஎஸ்கே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது மும்பை.
மும்பை ரன் குவிப்பு
9 விக்கெட்களை இழந்த போதிலும் 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்களை குவித்தது. சிஎஸ்கே அணிக்கு சவாலான இலக்காக 163 ரன்களை நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. சிஎஸ்கே அணியில் துவக்க வீரர்களாக ஷேன் வாட்சன் - முரளி விஜய் களமிறங்கினர்.
ஷேன் வாட்சன் அவுட்
ஷேன் வாட்சன் முதல் ஓவரின் கடைசி பந்தில் ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அடுத்து முரளி விஜய்யுடன் பாப் டுபிளெசிஸ் இணைந்தார். முரளி விஜயு இரண்டாவது ஓவரில் தடுமாறினார்.
தடுமாற்றம்
பாட்டின்சன் வீசிய இரண்டாவது ஓவரில் பந்தை சந்திக்கவே தடுமாறிய முரளி விஜய் நான்காவது பந்தில் பந்தை அடிக்காமல் விட, காலில் பட்டு எல்பிடபுள்யூ கேட்கப்பட்டது. அம்பயர் மறுத்து விட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி ரிவ்யூ கேட்கவில்லை.
அவுட் தான்
ஆனால், ரீப்ளேவில் அந்த பந்து ஸ்டம்புகளை தகர்ப்பது தெரிய வந்தது. மும்பை அணி நல்ல வாய்ப்பை தவற விட்டது. ஆனாலும், விதி வலியது என கூறுவதை நிரூபிப்பது போல, அந்த ஓவரின் கடைசி பந்து முரளி விஜய் காலில் பட்டது.
அவுட் இல்லை
இந்த முறை அம்பயர் அவுட் கொடுத்தார். எதிரே இருந்த பாப் டுபிளெசிஸ் இது அவுட் இல்லை என கணித்து ரிவ்யூ கேட்குமாறு முரளி விஜய்யிடம் கூறினார். ஆனால், முரளி விஜய் அதை கேட்காமல் வெளியேறினார். பின்னரே ரீப்ளேவில் அது அவுட் இல்லை என தெரிய வந்தது.
அம்பதி ராயுடு
முரளி விஜய் தன் விக்கெட்டை மும்பை அணிக்கு வாரி வழங்கினாலும், அடுத்து வந்த அம்பதி ராயுடு சிறப்பாக ஆடி அணியை மீட்டார். அவர் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். பாப் டுபிளெசிஸ் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ரன் குவித்தார்.