துபாய்: மும்பைக்கு எதிரான போட்டியில், சென்னை அணிக்கு துபாய் பிட்ச் புதிய தலைவலியை கொடுத்துள்ளது.
கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர், நாளை (செப்.19) மீண்டும் தொடங்குகிறது.
முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இத்தொடரில் இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில், 27 நாட்களில் அனைத்து போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளன. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி தொடரில் 5 டபுள் ஹெட்டர்ஸ் நடந்து முடிந்துவிட்டதால், 2வது பாதி தொடரில் 7 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. நாளை தொடங்கவுள்ள போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என அனைத்து அணிகளும் அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த 2021 சீசனில், சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் ரன் ரேட்டை விட இது அதிகம். தற்போது 10 புள்ளிகள் வைத்திருக்கும் சென்னை அணி, மேற்கொண்டு இன்னும் 6 புள்ளிகள் சேர்த்தாலே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடலாம்.
அதேசமயம், மும்பை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. ரன் ரேட் +0.062. கைவசம் 7 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் முன்னேற, குறைந்தபட்சம் 4 போட்டிகளிலாவது அந்த அணி வெற்றிப் பெற்றாக வேண்டும். 5ல் வென்றால் நிச்சயம் பிளே ஆஃப் இடம் உறுதி. இந்த பரபரப்பான சூழலில் தான் நாளை இரு அணிகள் கோதாவில் குதிக்கின்றன. இந்த போட்டி, இந்திய நேரப்படி இரண்டு 7:30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சென்னை அணியில் காயம் காரணமாக டு பிளசிஸ் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. அதேபோல், குவாரண்டைனில் இருக்கும் சாம் கர்ரனும் இப்போட்டியில் விளையாட மாட்டார். எனவே சிஎஸ்கே-வில் ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (c & wk), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி ங்கிடி, ஜே ஹேசில்வுட் ஆகியோர் இடம் பிடிக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் ஷர்மா (c), குயின்டன் டி காக் (wk), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல்/ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'சம்பவம் இருக்கு' பயிற்சியில் காட்டுத்தனமாக சிக்ஸர் விளாசும் தோனி.. புதிய வீடியோவால் ரசிகர்கள் குஷி
சென்னை vs மும்பை போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்டை பொறுத்தவரை, இங்கு வேகப்பந்து வீச்சு எப்போதும் கைக்கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரு அணியின் வேகப்பந்துவீச்சு யூனிட்டில் எந்த அணி சிறப்பாக நாளை செயல்படுகிறதோ, அவர்களுக்கே வெற்றி உறுதி என்று கூறலாம். இந்த இடத்தில், சென்னை அணிக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதாவது, மும்பை அணியை பொறுத்தவரை, பும்ரா, ட்ரெண்ட் போல்ட் எனும் இரு பெரும் அசுரர்கள் அந்த அணியில் இருக்கின்றனர். இருவரும் உலகின் டாப் 5 பவுலர்கள் லிஸ்டில் இருப்பவர்கள். அதேசமயம், சென்னை அணியை பொறுத்தவரை தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், லுங்கி ங்கிடி, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இருக்கின்றனர். இதில், தீபக் ஓகே. ஆனால், ஷர்துலை டெத் ஓவர்களில் அதிகம் வீச வைக்க முடியாது. லுங்கி ங்கிடி தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்தாலும், இதுவரை எந்த சீசனிலும் அவர் ஒரு போட்டியில் கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் எப்படிப்பட்ட பந்துகளை வீசினாலும், நேற்று முளைத்த நண்டு, சிண்டு வரை விளாசுகிறார்கள்.
ஸோ, சென்னை அணியின் ஒரே ஆறுதல் ஜோஷ் ஹேசில்வுட் மட்டுமே. அவரது பங்கு தோனிக்கு மிக மிக அதிகமாக தேவை. பிபிசி அறிக்கையின் படி, போட்டி நடைபெறும் செப்.19ம் தேதி 42 டிகிரி செல்சியல் வெப்பநிலை அங்கு நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்பின்னர்களை ஒப்பிடுகையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த துபாய் பிட்ச் நன்கு ஒத்துழைக்கும் என்று ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கைகளில் தான் நாளை சென்னை அணியில் தலையெழுத்து அடங்கியிருக்கிறது எனலாம்.