மூன்று கோப்பைகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று முறை கோப்பை வென்றுள்ளது. அதிக முறை கோப்பை வென்ற அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. மேலும், தான் பங்கேற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
பலவீனம்
சிஎஸ்கே அணியின் பலவீனமாக கடந்த மூன்று ஆண்டுகளாக குறிப்பிடப்படுவது அந்த அணியில் வயதான வீரர்கள் அதிகம் இடம் பெற்று இருப்பது தான். பல முக்கிய வீரர்களுக்கு 35 வயதுக்கும் மேல் ஆகிறது. அவர்களால் எப்படி களத்தில் துடிப்பாக செயல்பட முடியும் என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.
இளம் வீரர்கள்
சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் பங்கேற்ற இளம் வீரர்கள் என எடுத்துக் கொண்டால் தீபக் சாஹரை தாண்டி நிலையாக அணியில் இடம் பெற்ற யாரையும் குறிப்பிட முடியாது. இந்த சீசனில் சாம் கர்ரன் அணியில் இணைந்துள்ளார். அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்குமா? என்பதும் தெரியவில்லை.
இரு முக்கிய வீரர்கள் இழப்பு
இதற்கிடையே 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இரண்டு முக்கிய அனுபவ வீரர்களை இழந்துள்ளது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இருவரும் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளனர். அது அந்த அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
கவாஸ்கர் விமர்சனம்
இது பற்றி பேசிய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாதது சிஎஸ்கே அணியில் பெரிய வெற்றிடத்தை உண்டாக்கி உள்ளது என்றார். அதே சமயம், இது இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றார்.
நல்ல ஐபிஎல் அணி..
ஒரு நல்ல ஐபிஎல் அணி என்றால் அதில் அனுபவமும், இளமையும் சரியாக கலந்து இருக்க வேண்டும். சிஎஸ்கே அணியில், அணியின் ஆற்றலை உயர்த்தும் இளம் வீரர்கள் இருக்கிறார்களா? இது தான் சிஎஸ்கே அணி சந்திக்கும் மிகப் பெரிய கேள்வி என்றார் கவாஸ்கர்.
கோப்பை வெல்வது கடினம்
இதே காரணத்தால் தான் சிஎஸ்கே அணி இந்த சீசனில் கோப்பை வெல்வது கடினம் என கடுமையாக விமர்சனம் செய்தார் கவாஸ்கர். ரெய்னா இல்லாததால், முரளி விஜய் துவக்க வீரராக இறங்க வேண்டும், அம்பதி ராயுடு மூன்றாம் வரிசையில் இறங்க வேண்டும் என்றார்.
ரெய்னா இழப்பு
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் கை தேர்ந்தவர். ஒரு இடது கை பேட்ஸ்மேனாக அவர் எந்த அணியிலும் ஒரு சம நிலையை ஏற்படுத்துவார். அவரது சேவையை மிகப் பெரிய அளவில் சிஎஸ்கே அணி இந்த சீசனில் இழந்துள்ளது என்றார் கவாஸ்கர்.
முதல் போட்டி
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டி செப்டம்பர் 19 அன்று இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி தன் பலவீனங்களை மீறி வெல்லுமா?