போட்டியில் என்ன நடந்தது?
முதல் ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 162 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டி காக் 33, திவாரி 42 ரன்கள் அடித்ததை தவிர எந்த பேட்ஸ்மேனும் நீடித்து நின்று ரன் குவிக்கவில்லை.
ராயுடு, பாப் டுபிளெசிஸ் அபாரம்
அடுத்து சிஎஸ்கே அணியினம் சேஸிங்கில் முரளி விஜய் 1, ஷேன் வாட்சன் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த அம்பதி ராயுடு - பாப் டுபிளெசிஸ் அரைசதம் கடந்து அபார ஆட்டம் ஆடி சிஎஸ்கே அணியை வெற்றி பெறச் செய்தனர்.
அம்பதி ராயுடு 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாப் டுபிளெசிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் குவித்து இருந்தார். 19.2 ஓவரில் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்டியது. சேஸிங்கில் மும்பை இந்தியன்ஸ் அணியை திட்டமிட்டு வீழ்த்தியது சிஎஸ்கே.
சிஎஸ்கே திட்டம்
முதல் சில ஓவர்களில் வேகப் பந்துவீச்சில் பந்து ஸ்விங் ஆனது. அதனால் தான் முதல் இரண்டு விக்கெட்கள் வேகமாக வீழ்ந்தன. முதல் 10 ஓவர்களை நிதானமாக ஆடிய சிஎஸ்கே அணி, அதன் பின் பனிப் பொழிவு துவங்கியதால் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறியதை பயன்படுத்தி அடித்து ஆடினர். அந்த திட்டம் வெற்றி பெற்றது.
பும்ரா சொதப்பல்
மும்பை இந்தியன்ஸ் அணியில் ட்ரென்ட் போல்ட், பாட்டின்சன் குறைந்த அளவில் ரன் கொடுத்து இருந்தனர். மற்ற மூவரும் அதிக ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். அதிலும் துல்லிய பந்துவீச்சாளரான பும்ரா 4 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளராக அதிர்ச்சி அளித்தார்.
ஓபனிங் வேகப் பந்துவீச்சாளர்கள்
பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினாலும் அதிக ரன்களை வாரி இறைத்ததே தோல்விக்கு காரணம். அவரை கேப்டன் ரோஹித் சர்மா சரியாக பயன்படுத்தவில்லை. பும்ரா முதல் இரண்டு ஓவர்களில் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ட்ரென்ட் போல்ட் - பாட்டின்சன் முதல் 5 ஓவர்கள் வரை பந்து வீசினர்.
பும்ராவுக்கு அளிக்கப்பட்ட ஓவர்கள்
பும்ராவுக்கு 6வது ஓவர், 12வது ஓவர், 15வது ஓவர், 19வது ஓவர் என நான்கு தனித் தனி ஓவர்களாக பிரித்தே பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு இரண்டு, இரண்டு ஓவர்களாக ட்ரென்ட் போல்ட் அல்லது பாட்டின்சன் உடன் பந்து வீச வாய்ப்பு அளித்திருந்தால் அதன் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.
ரோஹித் ஏன் இப்படி செய்தார்?
முதல் சில ஓவர்களில் பந்து ஸ்விங் ஆகும் என்பதால் ரோஹித் சர்மா பந்தை ஸ்விங் செய்யும் ஆற்றல் கொண்ட பாட்டின்சன், ட்ரென்ட் போல்ட் வசம் அளித்தார். அவர்களும் முதல் 5 ஓவர்களில் சிறப்பாகவே பந்து வீசினர். பும்ராவை கடைசி ஓவர்களுக்கு பயன்படுத்த நினைத்த ரோஹித், அதையும் சொதப்பி விக்கெட் எடுக்க வேண்டும் என்பதால் இடையே ஒவ்வொரு ஓவராக பயன்படுத்தினார்.
சுழற் பந்துவீச்சாளர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் மத்திய ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்தனர். இதுதான் சிஎஸ்கேவின் திட்டமும் கூட. வேகப் பந்துவீச்சை சமாளித்து ஆடி விட்டு, சுழற் பந்துவீச்சாளர்களை குறி வைத்து ரன் குவித்தது சிஎஸ்கே.
மும்பை இந்தியன்ஸ் சோகம்
துல்லிய பந்துவீச்சாளரான பும்ராவை முதல் சில ஓவர்களிலும் பயன்படுத்தாமல், கடைசி ஓவர்களிலும் பயன்படுத்த முடியாமல் ரோஹித் சர்மா செய்த சொதப்பலால் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது. அந்த அணி 2013ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஐபிஎல் தொடரின் ஓபனிங் போட்டிகளில் ஒருமுறை கூட வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது