தோனியின் திட்டம்
பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி அதிரடியாக சுழற் பந்துவீச்சை பயன்படுத்தியது. ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதை கணித்த கேப்டன் தோனி, மூன்று முக்கிய சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கினார்.
சூப்பர் சுழல் கூட்டணி
ஜடேஜா, ஹர்பஜன், இம்ரான் தாஹிர் சுழல் கூட்டணி அதற்கேற்ப 8 விக்கெட்களை அள்ளியது. ஹர்பஜன் டாப் ஆர்டரில் 3 விக்கெட்களை எடுத்தார். மிடில் ஆர்டர் மற்றும் கடைசி கட்ட வீரர்களை இம்ரான் தாஹிர் மற்றும் ஜடேஜா கவனித்துக் கொண்டனர்.
ஒரே போட்டியில்..
இவர்கள் வீழ்த்திய எட்டு விக்கெட்கள் போக, மற்ற இரண்டு விக்கெட்களில் ஒன்று பிராவோவுக்கும், மற்றொன்று ரன் அவுட் ஆகவும் கிடைத்தது. ஐபிஎல் வரலாற்றில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஒரே போட்டியில் எட்டு விக்கெட் கிடைத்திருப்பது மிகவும் அதிகம்.
இரண்டாவது முறை
மேலும், இது இரண்டாவது முறையாக நடந்துள்ளது. முதல் முறை ஒரே போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்கள் எட்டு விக்கெட் வீழ்த்தியது 2012இல் நிகழ்ந்தது. அந்த சாதனையையும் சென்னை அணி தான் செய்திருந்தது. தோனி எப்போதுமே சுழற் பந்துவீச்சை சரியாக பயன்படுத்துவதில் வல்லவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார்.
டெக்கான் சார்ஜர்ஸ் போட்டி
2012இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 193 ரன்கள் குவித்தது. அதை டெக்கான் அணி சேஸ் செய்த போது, சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா 5, ஜகாதி 2, ரெய்னா 1 என எட்டு விக்கெட்களை கைப்பற்றினர். டெக்கான் அணி 119 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
ஆச்சரியம்
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், 2012 போட்டியிலும், 2019 போட்டியிலும் எதிரணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் சென்னை அணியிடம் இழந்துள்ளது.