மூன்று தோல்விகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த சீசனில் தட்டுத் தடுமாறி பிளே-ஆஃப்பில் நுழைந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது அந்த அணி. அந்த அணிக்கு வெளிநாட்டு வீரர்கள் வகையிலும் பல சிக்கல்கள் உள்ளன.
முக்கிய பங்கு இவர்கள் தான்
தற்போது ராஜஸ்தான் அணியில் வெளிநாட்டு வீரர்களே முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். ஆனால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராக வேண்டி, மே மாத துவக்கத்தில் அவர்கள் நாடுகளுக்கு திரும்ப உள்ளனர்.
நாட்டுக்கு திரும்புவார்கள்
ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஆஷ்டன் டர்னர், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு வீரர்கள் மே மாத துவக்கத்தில் அவர்கள் நாட்டுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இல்லாமல் பார்த்தால், ராஜஸ்தான் அணி பலவீன அணியாகவே இருக்கும்.
கடும் சிக்கல்
எனவே, பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்றால், ராஜஸ்தான் அணி மே மாதத்திற்குள் முடிந்தவரை போட்டிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால், முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து கடும் சிக்கலில் இருக்கிறது.
ரஹானேவிற்கு அபராதம்
இந்த நிலையில்தான் ராஜஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்ற காரணத்திற்காக, அணியின் கேப்டன் ரஹானேவிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. எதையும் தாங்கும் இதயமான ரஹானே தோல்விகளோடு, இதையும் தாங்கிக் கொண்டுள்ளார்.
அடுத்த முறை செய்தால்..
இந்த சீசனில் முதல் முறையாக ராஜஸ்தான் அணி குறைந்த ஓவர் ரேட் வைத்திருந்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அபராதம். மீண்டும் இதே தவறு நடந்தால், கேப்டனுக்கு 24 லட்சம் அபராதம், வீரர்களுக்கு தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.